இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label வெண்பா - குறள். Show all posts
Showing posts with label வெண்பா - குறள். Show all posts

September 22, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




காதல் :
/ இன்பம்


231)
படித்தாள் தெளிந்தேன்; கொடுத்தாள் இழந்தேன்;
அடித்தால் அலையாவேன் நான்

232)
காது வழிகேட்டு காதலின் மேல்ஐயம்
கொள்வதெல்லாம் காதலா காது

233)
ஆதலால் காதல்செய்; சாதலில் வீழாது
காதலால் வாழும் உலகு

234)
காதலில் தோல்வியில்லை; வீழ்தல்தான் வெற்றியிங்கு;
ஆதலால் காதலில் வீழ்

235)
உலக அழகியைப் போல்காட்டும் உள்ளூர்க்
கிழவியையும்; காதலிக்கும் கண்





September 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்



ஏன் ...?!/ பொருள்

226)
கையூட்(டு) எனும்கள்ளம் அன்பளிப்பாய் மாறியின்று
கட்டணம் என்றானது ஏன்

227)
மரம்விதைத்து சாலைசென்ற(து) அன்றுதான்; இன்று
மரம்புதைத்த சாலைகள் ஏன்

228)
பெருக்கியள்ளும் குப்பையை வீதியில் வீசிவரும்
குற்றமற்றத் தன்மைவந்த(து) ஏன்

229)
தனித்தனியாய் வாழும் முறைதான் இனிதென்னும்
எண்ணம் உருவான(து) ஏன்

230)
கோடிகள் மொத்தமும் நாட்டிலுள்ள கேடிகளை
மட்டுமே நாடுவ(து) ஏன்

September 18, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்


வில்லி:/இன்பம்
221)
கசக்கி எறிந்தாள்; எரிந்தாலும் என்னுள்
கசக்கா(து) அவளின் நினைவு

222)
வீழ்ந்துவிடும் எண்ணத்தில் நானிருப்பேன்; எப்படியும்
வீழ்த்திவிடும் நோக்கில் அவள்

223)
நாசுக்காய் உள்ளம் நசுக்குவாள்; சொல்லாமல்
நாசம் விதைப்பாள் அவள்

224)
விடைத்தாள் எனக்குள்; விதிகள் மறந்தேன்;
விடைத்தாள் முழுதும் அவள்

225)
என்னவென்ற கேள்வியுடன் நின்றிருப்பேன்; ஓர்நொடிக்குள்
என்னைவென்று சென்றிருப்பாள் பெண்

September 15, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்



படி, அதுதான் படி :/பொருட்பால்
216)
வேதமோ வாதமோ எண்ணத்தைச் சேதமின்றி
சொல்லும் வழியைப் படி


217)
புனிதராய் மாற முயலா(து) உலகில்
மனிதராய் வாழப் படி


218)
காடுசொல்லும் வாழ்க்கை முறைபடி; வீட்டுக்குள்
வாழும் உணர்வைப் படி


219)
உழைப்பைச் சுரண்டும் பிழைப்பை, மிரட்டி
அழிக்கும் வழியைப் படி


220)
பெரியோரின் சொற்படி நன்குபடி; ஆகுமடி
சொர்க்கத்தின் வாசற் படி

September 13, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்


வாக்கும் நாக்கும் : / பொருள்

211)
பானம் பருகிய பின்சொல்லால் பாணம்
தொடுக்கும்வில் ஆகிவிடும் நாக்கு

212)
இதயத்தில் தொக்கிக் கிடப்பதுதான் நாக்கில்
உதித்து வெளியே வரும்

213)
சொல்வாக்கு சுத்தம் இருக்கும் இடம்தேடி
செல்வாக்கும் ஓடி வரும்

214)
வாக்கால் உயர்வடைய வேண்டுமெனில் முன்துள்ளும்
நாக்கிற்குப் போடு தடுப்பு

215)
வாக்கால் இணைந்துவிட்டால் நம்முள் வருமாமோ
வாய்க்கால் தகராறு கூறு

September 8, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



எல்லாமும் ஆவாளே இல்லாள் :/இன்பம்
( நாளை எங்கள் மணநாள் : அவளுக்கு என்குறளைப் பரிசாகக் கொடுத்துப் பதிலுக்கு அவள்குரலைப் பெறுவேன் .... வாழ்த்துங்கள் எங்களை :)

206)
தாய்பத்துத் திங்கள்தான்; தன்னாயுள் தாண்டியும்
என்னைச் சுமப்பாள் இவள்


207)
நான்வந்து தோள்சாய்க்கும் ஏணியவள்; தான்வந்தென்
தோள்சாயும் தோழி அவள்


208)
நெடும்தூரம் எல்லாம் நொடியில் தொடும்தூரம்
ஆகுமவள் வந்த பிறகு


209)
துயில்கிறது கண்ணிரண்டு; நாணும் மயிலிறகு;
தானும் அழகில்லை என்று


210)
சிறுவெள்ளை வானில் இருநிலவு; வட்டக்
கருநிலவு என்னவளின் கண்

September 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



கடவுள் வாழ்த்து :அறம்
201)
நேற்றாகி இன்றாகி என்றும்தான் என்றாகி
நிற்பானின் தாள்வணங்கிப் போற்று

202)
இடத்தைத் திறப்பார் வலத்தை அடைப்பார்;
தடத்தை அறிந்துகொள் நீ

203)
காட்டுவார் என்றெதிர் பார்த்தால் அதுஇயல்பு;
ஊட்டுவார் என்றிருந்தால் தீது

204)
எண்ணம் நிறைவேற வில்லை யெனில(து)
இறைவனின் எண்ணமென்று கொள்

205)
அர்ச்சனை இல்லாத ஆலயம் காட்டும்
பிரச்சனை இல்லா உலகு

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



வாழ்க உறவுகள்

எனது சகோதரர்கள் பாஸ் என்னும் பாலாஜி பாஸ்கரன் அவர்கள் தூண்டிவிட,ப்ரசாத் வேணுகோபால் தலையில் தட்டி தளைத் திருத்தம் சொல்ல
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் மாதம் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன் ... இதோ ...இன்று நின்று திரும்பிப் பார்க்கிறேன்....10 மாதங்கள்..உங்களின் உற்சாக உந்துதலினால் ...200 குறள்கள் முடித்திருக்கிறேன்... :))
மாதம் 20 :))
(# இதில் எத்தனைதான் தேறும் என்பது வேறு கணக்கு )

”குறள் அமைப்பை ஒத்துத்தானே இருக்கிறது ?
ஏன் குறள் போல என்று ஐயத்தோடு தலைப்பு? மாற்றுங்கள்! ”
- என்ற பெரியவர்களின் அறிவுரையின்படி தலைப்பை மாற்றி இருக்கிறேன் ..
( முதலில் என்மேல் எனக்கில்லாத் நம்பிக்கையின் வெளிப்பாடு அது ... யாராவது ‘என்னய்யா இது ?’ என்று கேட்டால் அந்த ‘போல’வைக் காட்டித் தப்பித்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருந்தேன் :இன்னும் பலருக்கு இந்த ஐயம் உள்ளது என்றே நினைக்கிறேன்.. கேட்காமல் இருக்கிறார்கள்..அவ்வளவுதான் : ))

தொடர்ந்து வழிகாட்டுங்கள் ... பயணிக்கக் காத்திருக்கிறேன்

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..!

September 1, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



அறிந்ததைச் சொல்லவா ?

196)
நித்தம் கிடைத்தால் அதுமுத்தம் என்றாலும்
தித்திக்கா(து) என்ப(து) உணர்


197)
தீராத கோபமுன்னை சேரா(த) இடம்சேர்க்கும்;
போராக்கித் தான்முடியும் நம்பு


198)
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு


199)
உரல்குழிக்குள் போய்விழுவார்; பின்விழித்தால் குத்தும்
உலக்கைமேல் சொல்வார் பழி


200)
வகைக்குள் உனைத்திணித்தால் உண்டாகும் உட்பகை;
தீயின்றி ஏது புகை.


August 29, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




’அ’ தந்தான் ’ஆ’சான் :



191)
கொற்றவன்முன் கற்றவன் நிற்பான் பயம்துறந்து;
கொற்றவன் நிற்பான் பணிந்து


192)
மானவன்தான் என்றாலும் முன்பவனும் ஓர்குருவின்
மாணவன்தான் என்ப(து) அறி

(மானவன் = அரசன், வீரன், தலைவன்)

193)
படிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்பார்:
படிக்கல்லாய் ஆவாய் உணர்


194)
தருவது மட்டுமே தன்செயல் என்னும்
குருவிற்(கு) இணையில்லை இங்கு


195)
புரியாமல் கற்கும் எதுவும் நிலைக்கா(து)
அதுவாகும் நீர்மேல் எழுத்து

August 25, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


குட்டிக் கதை சொல்லவா ?

186)
தேன்தான் கொடுக்குமென்(று) எண்ணித் தொடராதே;
தேனீக்கும் உண்டாம் கொடுக்கு


187)
ஓடி ஒளிந்துவிடும் பாம்பைக்கை யால்பிடித்தால்
ஆடி அடங்கிவிடும் வாழ்வு


188)
எலிஅழுதால் பூனை விடாது; வலிக்க
எதிர்த்தால் பிறக்கும் வழி


189)
புலியில்லா ஊரில் தெருவெல்லாம் கூத்தாம்;
எலிதான் நடத்தும் அரசு


190)
ஐந்தடக்கி நிற்கும்; உறுமீன் வரும்வரையில்
சைவமாய்க் காத்திருக்கும் கொக்கு

August 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


கோபத்தில் அவளிருந்தால் ...!

181)
வானம் பறக்க முயல்வேன்நான்; ஐயத்தில்
வானம் பறிப்பாள் அவள்


182)
கேள்விக் குரிய பதில்பலக் கொண்டவளாம்
கேள்விக் குறியாம் அவள்


183)
நாளை வருவேன் எனச்சொல்வாள்; நான்நம்பி
நாளையெண்ணிக் கொண்டிருப் பேன்


184)
ஆத்திரத்தில் பேசா(து) இருக்கும் அவளறிவாள்
பாத்திரத்தால் பேசும் மொழி

185)
”வழிபடு என்றுன்னை வேண்டவில்லை; போகும்
வழிவிடு போதும் எனக்கு”

August 20, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அறி.. நீயாவாய் அரி :
176)
உதறிக் கழித்த பொழுது கதறி
அழுதாலும் மீளா(து) அறி


177)
மணக்கும் மலரைப் பறிக்கும்முன் முள்ளின்
குணத்தை முதலில் அறி


178)
தடுமாறும் போதெல்லாம் தோள்கொடுக்க உன்தடத்தில்
பாரியின்தேர் வாரா(து) அறி


179)
கொடுக்கும் குணத்தைக் கெடுப்போர் இடுப்பின்
உடுப்பை இழப்பார் அறி


180)
அச்சாணி இல்லாமல் சக்கரம் முச்சாணின்
முக்கையும் தாண்டா(து) அறி

August 16, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


ஏன் ஏங்க வைக்கிறாள் இவள் ? :
171)
விரகம் இறுக்க விரைவான் அவனும்;
விரதம் இருப்பாள் அவள்


172)
ஏமாறத் தான்வேண்டும் நானின்றும்; ஏன்மாற
வில்லையாம் இன்னும் அவள்


173)
வாய்ப்போடு வந்தமர்ந்தேன்; வாய்ப்பாடு கேட்டுவிட்டாள்;
வாய்ப்பூட்டுள் சிக்கியது நாக்கு


174)
இல்லாள் பெருமையைக் கேட்காமல் சொல்லும்
அவளருகில் இல்லாப் பொழுது


175)
செல்லக் கிளிச்சொல்லைக் கேளாமல் வந்தஎன்னுள்
மெல்லப் படரும் கிலி


August 14, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அறிந்ததைச் சொல்லவா உனக்கு ?

166)
எள்வேண்டும் என்போர்முன் எண்ணையுடன் சென்றால்உன்
எண்ணம்மேல் குற்றம் வரும்

167)
மண்ணில் எதிர்பார்க்கும் மாற்றம் எதையும்நீ
உன்னில் இருந்தே தொடங்கு

168)
பூவுள் மறைந்திருக்கும் நாகம்;உன் நாவுள்
மறைந்திருக்கக் கூடும் விசம்

169)
விசாலமாய் ஆக்குன் மனதை; உறவின்
விலாசமாய் மாறும் அது

170)
பிறர்குறையை நக்குவதைக் காட்டிலும் தன்கறையை
நீக்கினால் சேரும் சிறப்பு

August 9, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இயற்கையே இவள்தானோ !

161)
மேகம்போல் மூண்டாள்; கொடும்பூதம் போல்சூழ்ந்தாள்;
வேகமாய் என்னுள் மழை

162)
எண்ணமெல்லாம் என்னவள்; சேர்ந்திடும் நாள்வரை
வண்ணமில்லா வானவில் நான்

163)
கோடை வெயிலிலும் கொஞ்சியவள் வந்துநின்றால்
வாடைக் குளிர்தான் எனக்கு

164)
பக்கென்றுப் பற்றிவிடும் தொட்டவுடன்; பாவிமகள்
பத்து விரலும் திரி

165)
வீழ்ந்துவிடும் எண்ணத்தில் நான்;வீழ்த்தும் திண்ணத்தில்
நீளும் அவளின் கனவு

August 6, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



அறிந்து கொள், அறியாமையைக் கொல்:
156)
தங்கி இருத்தலும் தேங்கிக் கிடத்தலும்
ஒன்றல்ல என்ப(து) அறி

157)
தனித்துவந்தோம் என்று தவறாய்க் கணித்துத்
’தணிந்துபோ’ என்போரை வீழ்த்து

158)
புலியின்மேல் உள்ள வரிகள் அனைத்தும்
தழும்பல்ல என்ப(து) அறி

159)
பத்துக்குள் ஒன்றென்று முங்காது; நான்தான்
பதினொன்(று) எனமுந்தி வா

160)
உள்க்காயம் ஏற்கப் பழகு; துளையின்றிப்
புல்லாங் குழலும்தான் ஏது

August 3, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


கனவே நினைவாக :

151)
அசத்தல் கனவு; வசமாக்க வந்தாள்;
நிசத்தில்என் முன்னால் நிலவு

152)
உன்னைஉள் வாங்கும் பொழுதெல்லாம் நான்பெறுவேன்
விண்ணைவில் ஆக்கும் திறன்

153)
வந்தணை என்றவரம் வேண்டுவேன்; தந்தவுடன்
வந்தனை செய்வேன் பணிந்து

154)
தழுவல் விலக்குவாள்; தள்ளித் தவழ்வாள்;
நழுவுமென் காலின்கீழ் வாழ்வு

155)
எதிரிருந்தும் இல்லை இழுத்தணைக்கும் வாய்ப்(பு);என்
எதிரிக்கும் வேண்டாமிவ் வாழ்வு

July 11, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


என்னவளே...எல்லாமும் ஆனவளே:


131)
கட்டுவாள்; பின்பதறித் தன்கையால் பொத்துவாள்;
குத்திவெளி வந்திருக்கும் என்று

132)
கொடுத்திணைத்தாள் வந்து; பிடித்தணைத்தாள் தந்து;
கொடுத்ததைக் கேட்பாளோ பின்பு

133)
தன்னைக் கொடுத்தவுடன் என்னை எடுத்துவிட்டாள்;
உண்மையில் யாருக்(கு) இழப்பு

134)
சந்தேகம் ஏதுமில்லை; உன்தேகம் மட்டும்தான்
என்தாகம் தீர்க்கும் விருந்து

135)

சேர்வோம் எனும்உன்ஓர் சொல்தானே என்மனச்
சோர்வை அகற்றும் மருந்து

( நன்றி : கரு : எம் முன்னோர் :)

July 8, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




கண்ணென்ன கண் :


126)
நாணுமவள் கண்பார்க்க நானும்தான் காத்திருப்பேன்;
நாளும் நிகழும் இது

127)
மரம்கொத்தும் கூர்அலகும் மண்டியிட்டுத் தோற்கும்
மனம்குத்தும் உன்ஓர்கண் முன்பு

128)
மைபூசும் உன்கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்
பொய்பேசும் உன்உள் மனது

129)
கண்டவுடன் பற்றிவிடும் கற்பூரத் துண்டு
கலந்த கலவையவள் கண்

130)
சீர்கெடுக்கும் மையிட்டக் கண்ஒன்று; சீர்கொடுத்தென்
சீக்கெடுக்கும் மற்றது வந்து