இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 29, 2014

அவனிடமும் பேசுவேன் நான் !


இறைவன் / அறக்குறள்
386)
கடவுள்நீ என்முன் வரவேண்டும் என்றேன்;
கடஉள்நீ என்றான் அவன்


387)
வருவாய் குருவாய்; மலர்வாய் ஒருவாய்;
வருவாய் அதுவே எனக்கு


388)
தருவாய் தரிசனம் கண்ணுக்(கு); அதுபோல்
தருவாய் வருமோ எனக்கு


389)
கற்பனையாய்க் கற்பானை; சொற்பனையாய் விற்பானை;
அற்பனெனை காத்தணைப்பாய் நீ


390)
கறைகள் மறைந்து மறைகள் அறிய
இறைமுன் கரைதல் முறை

September 25, 2014

இயற்கையும் ஆசானே ...!


மரக்குறள் / பொருள்


381)
அழிவில்லை என்போர் அறிந்ததில்லை போலும்
கிளையில் இலையின் நிலை

382)
பழம்மட்டும் தானா அழகு; பழுத்து
விழும்இலையும் தானே அழகு

383)
ஆல்வைத்து வாழ்ந்தார்நம் முன்னோர்; வளர்ந்ததை
ஆள்வைத்துச் சாய்க்கிறோம் நாம்

384)
வாழைதலை சாய்ப்பது தன்குலையைக் காப்பதற்கு;
கோழைத் தனத்தினால் அன்று

385)
முயற்சி விதையாம்; முளைத்தால் மரமாம்;
புதைந்தால் உரமாம் பிறர்க்கு


September 9, 2014

சில குறிப்புகள் உனக்கு


சில குறிப்புகள் உனக்கு / பொருள்

376)
இருகையும் சேர்ந்தே உழைத்தாலும் உண்ண
ஒருகைக்குத் தான்தருவார் வாய்ப்பு

377)
சுள்ளிவெட்டும் வேளையில் சொல்லிவிட்டுத் தான்குத்தும்
முள்ளென்று எதிர்பார்த்தால் தப்பு

378)
கண்ணொன்றில் நீர்வடிந்தால் இன்னொன்றும் சேர்ந்தழுமே
தன்னால் உணர்வதுவே நட்பு

379)
வணங்கிமுன் நிற்போரைக் காட்டிலும் இன்னும்
பணிவாய் வணங்கப் பழகு

380)
அகலக்கால் வைக்காமல் ஆழம் புதைத்தால்
அகலும்;கால் சூழும் இழுக்கு