இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 27, 2009

திருக்குறளும் , என் குரலும் ...!

அதிகாரம் 9 : விருந்தோம்பல் :

விருந்தினர் காத்திருக்க நல்லமுதென் றாலும்
விருந்தோம்பா(து) உண்ணல் தவிர்ப்பீர் - ஒருவன்
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று
----------(8)

[ முதல்குறள் ஈற்று = தவிர் ; ஆசு = பீர் ]


முகமலர்ந்து நல்விருந்தோம் பும்வீட்டில் வாழ்வாள்
அகமலர்ந்து செல்வம கள்தான் - மகிழ்ந்தே
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
---------------------(9)
[முதல்குறள் ஈற்று = கள் ; ஆசு = தான் ]


அதிகாரம் 10 : இனியவை கூறல் :

இனியசொற்கள் தேடியுரைப் போரின்பா வம்நீங்கி
புண்ணியம் கூடிச்சே ரும்பாராய் - என்றுமிங்கு
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
-------------------------(10)
[முதல்குறள் ஈற்று = ரும் ; ஆசு = பாராய் ]

October 23, 2009

காத்திருக்கும் தமிழச்சி .....!!


ஊரடங்கும் சாமத்தில் தூங்காமல் நானிருக்க
ஊரெல்லை யில்என(து) உள்ளம் தவமிருக்கு
ஆழத்துள் மூழ்கிவிட்ட அம்மிக் குழவியாய்
ஆழ்மனதுள் உன்நினைப் பு

கருவேல முள்ளொடிச்சுக் கள்ளிச் செடியில்
ஒருசேர நம்பேர ஒண்ணா எழுதிவச்சு
ஊரவிட்டுப் போகையில காத்திருன்னு சொன்னஉன்
வார்த்தையிலென் மூச்சிருக் கு

ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
ஊருணிப் பாறையில் ஒருத்தியாத் தானிருக்கேன்
ஊரெல்லாம் சாடைக்கு ஓரணியில் சேர்ந்திருக்கு
யாரென் நிலைசொல்வா ருனக்கு

சொத்தைப்பல் லுன்னுசொல்லி சும்மாப் புடுங்கியே
செத்தைக்குள் வீசுனியே சிங்கப்பல் ஒன்றையே
சொத்தைப்போல் எடுத்தெனது சட்டையில் சுத்தியே
மெத்தைக்குள் வச்சிருக் கேன்

ஊருவந்து தடுத்தாலும் உள்ளேநீ தானிருப்பாய்
யாருவந்து பிரிச்சாலும் என்னுள்நீ வாழ்ந்திருப்பாய்
உன்மூச்சுக் காற்றிலென் மூச்சுவாங் கும்வரைக்
கன்னியிருப் பாளிங்கேக் காத்து

என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; உனக்காகக்
காத்திருப்பேன் நான்கரையா மல்

கலங்காதே காத்திருக்குக் காலம் நமக்கு
துலங்காதே நீயில்லா(து) ஒன்றும் எனக்கு
காத்திருப்பாய் எல்லையை சாமியாய் நீயங்கு
காத்திருப்பேன் உன்னைநான் இங்கு

திருத்திய பதிவு :
[ நன்றி : சுபைர் ராமசாமி அய்யா அவர்கள் / சந்தவசந்தம்]

ஊரடங்கும் சாமத்தில் தூங்காமல் நானிருக்க
ஊரெல்லை யில்என(து) உள்ளம் தவமிருக்கு
ஆழத்துள் மூழ்கிவிட்ட அம்மிக் குழவியாய்
ஆழ்மனதுள் உன்நினைப் பு

கருவேல முள்ளொடிச்சுக் கள்ளிச் செடியில்
ஒருசேர நம்பேர ஒண்ணா எழுதிவச்சு
ஊரவிட்டுப் போகையில காத்திருன்னு சொன்னஉன்
வார்த்தையிலென் மூச்சிருக் கு

ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
ஊருணிப் பாறையின் மத்தியில் தானிருக்கேன்
ஊரெல்லாம் சாடைக்கு ஓரணியில் சேர்ந்திருக்கு
யாரெனைச் சொல்வா ருனக்கு

சொத்தைப்பல் லுன்னுசொல்லி சும்மாப் புடுங்கியே
செத்தைக்குள் வீசுனியே சிங்கப்பல் ஒன்றையே
சொத்தைப்போல் பொத்தியே சட்டையில் சுத்தியே
மெத்தைக்குள் வச்சிருக் கேன்

ஊரே தடுத்தாலும் உள்ளேநீ தானிருப்பாய்
யாரும் பிரிச்சாலும் என்னுள்நீ வாழ்ந்திருப்பாய்
உன்மூச்சுக் காற்றிலென் மூச்சுவாங் கும்வரைக்
கன்னியிருப் பாளிங்கேக் காத்து

என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; உனக்காகக்
காத்திருப்பேன் நான்கரையா மல்

கலங்காதே காத்திருக்குக் காலம் நமக்கு
துலங்காதே நீயில்லா(து) ஒன்றும் எனக்கிங்கு
காத்திருப்பாய் எல்லையை சாமியாய் நீயங்கு
காத்திருப்பேன் உன்னைநான் இங்கு

October 21, 2009

திருக்குறளும் , என் குரலும் .....!

அன்பின் உள்ளங்களே .,

திருக்குறளுக்கான எளிய விளக்கமாக (அ ) ஒத்தக் கருத்துள்ள எனது முதல் குறளையும், தொடர்ந்து அதற்கான திருக்குறளையும் ‘ஆசிடை நேரிசை வெண்பா’ வாக அமைத்துள்ளேன் .

தங்களின் மேலான அறிவுரைகளால் , இலக்கின் திசையினை அறிந்தேன் . இலக்கினை நோக்கி செலுத்துங்கள் . இயன்றதைச் செய்வேன்.

நன்றி !

[ 26.7 ஆசிடை நேரிசை வெண்பா

இருகுறள்களை ஒன்று சேர்த்து, ஒரு நேரிசை வெண்பாவாக்க முயலும்போது,
முதல் குறள் 'நாள்' அல்லது 'மலர்' என்ற ஓரசைச் சீரில் முடிந்தால், அந்த ஓரசையுடன்
ஒன்றோ, இரண்டோ அசைகள் சேர்த்தால் தான், தளை தட்டாத நேரசை வெண்பா
(தனிச்சொல்லுடன்) உருவாகும். (ஏன்?) 'காசு', 'பிறப்பு' என்று
முடிந்தாலும் , பொருத்தமான எதுகையுடைய
தனிச்சொல்லைத் தேர்ந்தெடுக்க ஒன்றோ, இரண்டோ அசைகளைச் சேர்க்க நேரிடும்.
இவற்றை 'ஆசிடை நேரசை வெண்பா'க்கள் என்பர். 'ஆசு' என்பது உலோகத் துண்டுகளை
இணைப்பதற்குப் பயன்படுத்தும் பற்று.

நன்றி ; யாப்புலகம் / கவிதை இயற்றிக் கலக்கு / திரு .பசுபதி அய்யா அவர்கள் ]

அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :

எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகுக்கு என்றுமாண் டவன்தான் - உலவும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
-----------------------(1)

[முதல்குறள் ஈற்று = டவன் ; ஆசு = தான் ]


கற்றறிந்தோர்; ஆண்டவன்தாள் ஏற்காதோர்; எல்லாம்
அறிந்தும் அறியா தவராவார் - முற்றிலும்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
----------------------(2)

[முதல்குறள் ஈற்று = தவர் ; ஆசு = ஆவார் ]


அதிகாரம் 02 : வான் சிறப்பு :..

மண்ணுயிரின் வாழ்வுயர வானிலிருந்(து) காலமெல்லாம்
மண்புகும மிழ்தாம் மழையது - என்றும்போல்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
---------------(3)

[ முதல்குறள் ஈற்று = மழை; ஆசு = அது ]


அதிகாரம் 7 : மக்கட்ப் பேறு :..

கற்றோர் அவையில் மகனை முதன்மைப்
பெறவைத்தல் தந்தை பொறுப்பாகும் - பெற்றெடுத்த
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
-----------------------(4)

[முதல்குறள் ஈற்று = பொறுப்பு; ஆசு = ஆகும்]


மக்களே சொத்தாவர் ; ஆற்றும் வினைப்பயன்
பெற்றோரை வந்தடை யும்பாரீர் - நற்புகழ்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையால் வரும்
---------------------(5)

[முதல்குறள் ஈற்று = யும் ; ஆசு = பாரீர்]

அதிகாரம் 8 : அன்புடைமை :..

அணையால் கடலை மறிக்க முடியுமா ?
கண்ணீரே காட்டுமுள்ளத்(து) அன்பதை -- அன்புடையோர்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
--------------------------(6)

[ முதல்குறள் ஈற்று = அன்பு ; ஆசு = அதை]




அதிகாரம் 10 : இனியவை கூறல் : ..
இனிமேல் எதனால் கலகம்; அதனால்
இனிமையாய்ப் பேசிப் பழகுவீர் - என்றும்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று
--------------(7)

[ முதல்குறள் ஈற்று = பழகு ; ஆசு = வீர் ]

October 12, 2009

திருக்குறளும் , என் குறளு(லு)ம் !

அன்பின் உள்ளங்களே ,

வெண்பாவில் (எனக்கு ) ஒரு புதிய முயற்சி.
ஒர் இருகுறள் வெண்பாவில் முதல் குறள் திருவள்ளுவரிடம் இருந்து பெற்று ,
தொடரும் குறளில் அதற்கு எளிமையாய் விளக்கம் தர முயன்றிருக்கிறேன் .

முதல் குறலின் ஈற்றுக்கும் ( ஓரசை எனில்) வரும் குறளின் முதலுக்கும் எப்படி தளை கொள்வது எனத் தெரியவில்லை.

ஆர்வக்கோளாரில் செய்திருக்கிறேன் ,
தவறெனில் சுட்டிக் காட்டுங்கள் .



அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
- பகலுக்கு
ஆதவனாம்; பூவுலகுக்(கு) ஆண்டவனாம்; பேசுகின்ற
வார்த்தைக்கு என்றும் தமிழ்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
- முற்றும்
அறிந்தோர்; கடவுள்தாள் ஏற்காதோர்; எல்லாம்
தெரிந்தும் தெரியா தவர்


அதிகாரம் 02 : வான் சிறப்பு :

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
- வானிலிருந்(து)
மண்ணுயிரின் வாழ்வுயர மண்புகும் ; இவ்வுலகுக்(கு)
என்றும் அமுதாம் மழை


அதிகாரம் 10 : இனியவை கூறல் :

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று
- இனிமேல்
எதனால் கலகம் உலகில்; அதனால்
இதமாகப் பேசிப் பழகு

October 8, 2009

வீரம் ?


வாழையை வெட்டியே வீழ்த்தி; இளம்குரும்
பாளையைச் சீவியதைப் போரென்பார் - காளையின்
வாலினைக்கூ டத்தொட்டு வீரமதைக் காட்டாத
கோழையுன் தீரம் உணர்

தப்புதான்...தப்புதான் !


”சொத்தப் பிரிச்சுத் தராமப் பொறுப்பின்றி
செத்ததுநம் அப்பாவின் தப்புதான்” -- துக்கத்தில்
பங்கு தவிர்த்து பணத்துக்கேங் கித்தவித்து
பொங்கியெழும் மானுடம் பார்

உயிரா?உயிலா??


உயிர்துறந்த பாவியின் உடலுக்கு முன்னால்
உயில்திறக்கும் சண்டையில் உற்றோர் - உயிலெங்கும்
ஓடுமோ?; மண்ணுள் ஒளிந்த(து) குடும்பத்தின்
கூடி வளர்க்கும் குணம்! ..

காக்கைகள்...


செத்தவரைச் சுற்றிலும் சத்தமாய் உற்றோர்கள்
சொத்துக்குச் சுற்றும் சிலம்பம்பார் - வைத்திருக்கும்
சோத்துக்குக் காக்கைகள் சண்டைபார்; சாய்ந்தது
சேர்த்து வளரும் குணம்

உன்னால் முடியும்


வெட்டிட வெட்டிட வாழ்வளிக்கும் வாழையிடம்
வெட்டியாய் காட்டாதே வீரம் - முடியும்
முடக்கியேக் காட்டிடு முட்டவரும் காளையை;
திட்டிவா சல்முன் முயல்

ஒருவாய் சோறு ..!


தெருவுப் பகையெல்லாம் தீருவ தெப்போ;
திருவிழா வெல்லாம் தொடங்குவ தெப்போ;
ஒருவாய்க் கறிசோறுக்(கு) ஏங்கிக் குழந்தை
ஒருவருச மாய்க்காத் திருக்கு

யாருக்குச் சாதகம்?....


ஆறோடும் பாதையில்நீர் ஊறுமா என்றுநீ
ஆரூடம் பார்த்தே அறிவாயா - யாரிடமும்
ஜாதகம் பார்;தனது சன்மானம் கூட்டவே
சாதகமாய் சொல்வார் அவர் .

நீதான் அந்த .....


தீவிரவா தம்தடுத்துத் தீமைத் துடைக்கவே
தேவனை வேண்டித் துதிப்பது - தேவையா?
உன்னை அறிவாய்; உணருன் அரிதாரம்;
உன்னுள்ளே அந்தவதா ரம்

வெளிச்சம் தேடும் விளக்கு

(09.05.11ல் திருத்தியது )

தண்ணியப் போட்டுவந்து மூஞ்சியிலக் குத்துறான்;
திண்ணையில கண்சொக்கிக் கக்குறான் - என்னசெய்ய?
சுள்ளுன்னு கஞ்சிவச்சு சூடாக் கொடுத்திட்டு
சுள்ளிப் பொறுக்கப்போ ணும்

இது ஆரம்ப நிலை வடிவம் :

தண்ணியப் போட்டுவந்து தூக்கிப்போட்(டு) சாத்தீட்டு
கண்தெரியா(து) கீழேக் கிடக்கிறான் - என்னசெய்ய?
சுள்ளுன்னு கஞ்சிவச்சு சூடாக் கொடுத்திட்டு
சுள்ளிப்பொ றுக்கப்போ ணும்

October 2, 2009

காந்தி விடச் சொன்னார்...!


அந்நிய நாட்டவரின் இந்தியச் சுற்றுலா
வந்தயிடத் தில்கணையாய் வந்துவிழும் வார்த்தைகள்

காந்தியின் வாழ்வினைக் கேள்விகளால் துளைக்கிறார்
காந்தியின் கொள்கையைக் கர்வமாய்க் கேட்கிறார்

எமக்கான வாய்ப்பினை ஏற்றே அமைகிறேன்
எம்மகான் ஆசை எடுத்துமுன் வைக்கிறேன்


”இம்சைக் கிடம்கொடா(து) உந்தி விடச்சொன்னார்

அந்நிய மோகமதை அப்போ(து) விடச்சொன்னார்


தீண்டாமை யைத்தூரத் தள்ளி விடச்சொன்னார்

ஆணாதிக் கம்அவநம் பிக்கை விடச்சொன்னார்


ஆள்க்கொள் ளுமாசை அடியோ(டு) விடச்சொன்னார்

ஆழ்மன வேற்றுமையை மானுடம்வி டச்சொன்னார்


வாய்மைப் பெருக்கியே பொய்மை விடச்சொன்னார்

சோம்பல் அதனை சுத்தமாய்வி டச்சொன்னார்


மண்ணில் மதவேற் றுமையை விடச்சொன்னார்

உன்னில் பயமும் சுயமும் விடச்சொன்னார்”


எடுத்தத் தலைப்பில் எடுப்பாய் முடித்தேன்
அடுத்தொரு கேள்வியைத் தானவர் தொடுத்தார்

”சொன்னார் மகாத்மாவும்; சொன்னதெல்லாம் உங்களுக்கு !
என்னவெல்லாம் விட்டீர்கள் ? என்னிடம் சொல்லுங்கள் !!”


ஒருவரியில் கேட்டு ஓய்ந்தார வர்தாம்
ஒருநொடியில் மூச்சு ஒடுங்கியதெ னக்கு

எதிர்பார்க்க வில்லைஎதிர்க் கேள்வியதை நானும்
எதையும் விடவில்லை! ஏனென்(று) தெரியவில்லை?

அவர்பிறந்த நாள்அன்று விட்டதொன்று மட்டும் ;
அவர்சொல்லா(து) இன்று விடுப்பு