இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 21, 2015

இரட்டை நாக்கர்...!



581)
உன்னால் முடியும் திமிறென்பார்; பின்அவரே
ஏன்உனக்கு இத்திமிரென் பார்

582)
தப்பெதுவும் தண்டனைக்கு தப்பாது எனக்கொதிப்பார்;
தப்பேது எனக்குதிப்பார் பின்பு

583)
இப்படித்தான் நீயிருக்க வேண்டுமென்பார்; எப்படியும்
நானிருப்பேன் என்பார் பிறகு

584)
நல்லரைக் கெட்டவர் என்பார்;பின் கெட்டவரை
நல்லவர் என்பார் இவர்

585)
உப்பில்லா ஒன்றினை ஒப்பில்லை என்றுரைத்தால்
தப்பில்லை என்பார் இவர்


August 19, 2015

வந்து....எனக்கென வாய்த்தாளே...!


576)
அதுவேண்டும் என்பாள்; அதுவேண்டாம் என்பேன்;
அதுதான் நடக்கும் பிறகு

577)
புள்ளியிங்கு வேண்டாமே என்றுவைத்தேன் வேண்டுதலை;
துள்ளிவந்து வைத்தாள் அதை

578)
தலையாட்டச் சொன்னாள்; விளையாட்டாய்ச் செய்தேன்;
வினையாகிப் போனது அது

579)
நான்வேண்டும் என்பதை நீவேண்டாம் என்பாய்;
அதுதானே வேண்டும் எனக்கு

580)
முன்நின்று கூறுவாள் பெண்எதையோ; கண்ணில்
தெரிவதோ வேறு கதை

August 9, 2015

இதுதான் வாழ்க்கை !



571)
யாருக்கோ காத்திருக்கும் உன்மடியில் யார்யாரோ
வந்தமர்வார் என்பதுதான் வாழ்வு

572)
எதிர்பார்த்து இருந்தது எதிர்பாராப் போதுன்
எதிர்வந்து நிற்பதுதான் வாழ்வு

573)
விரும்பாத போதும் விரும்பியதை விட்டுத்
தரவேண்டும் என்பதுதான் வாழ்வு

574)
நான்நான்தான் நீநீதான் என்றால் அதுதாழ்வு;
நான்நீநாம் என்பதுதான் வாழ்வு

575)
யாருமில்லை என்றால் அதுதாழ்வு; யாருக்கும்
பாரமில்லை என்பதுதான் வாழ்வு

August 6, 2015

என்னவளே.....அடி என்னவளே .!!


566)
உன்னில்தான் என்னைநான் கண்டுகொண்டேன்; இன்றுவரை
தன்னைத்தான் கண்டதில்லை கண்

567)
விடையில்லை என்றால் விதியில்லை; நீயில்லை
என்றால் இனியில்லை வாழ்வு

568)
விழலெனக்கு நீரிறைக்க வந்தவளின் பாத
நிழலுக்கு நானே நிழல்

569)
விதையின்றி வேரில்லை உந்தன் நினைவன்றி
வேறில்லை என்னுலகில் பார்

570)
நாணவில்லை சொல்வதற்கு; வாய்ப்புவந்தால் வானவில்லைப்
போல்வளைவேன் நானவளின் முன்பு

August 2, 2015

நட்பு....ட்பு.....பு........பூ ...!!!!!!!!!!

--- நட்பு தின வாழ்த்துகள் ---
561)
ஆகாயம் கீழிறங்கும் நீநம்பு; உறவுக்குள்
ஆதாயம் தேடாது நட்பு

562)
தாளும்தோள் தாங்குவான் தோழன்; அவனால்தான்
வாழுமிந்தப் பாழும் உலகு

563)
வழிமொழிய மட்டுமல்ல; தப்பென்றால் உன்முன்
வழிமறித்தும் நிற்பதுதான் நட்பு

564)
உரிமை தரும்உறவைக் காட்டிலும் நன்றாம்
உறவை உருவாக்கும் நட்பு

565)
ஒருவர் பிரிந்தால் இறப்பது உறவாம்;
இறந்தால் பிரிவதுதான் நட்பு

August 1, 2015

மது.....து........த்து...........த்தூ...!!!!!!!!!!!!!!!


--- ஐயா . சசிபெருமாள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் ---

556)
பார்’என்று பாடிவைத்தார் பாரதி; பாருக்கு
அவர்பேரே வைப்போம் அதற்கு
(அல்லது)
பாருக்குள் நல்லநாடு என்றதனால்; பாருக்கு
அவர்பேரே வைக்கும் அரசு


557)
தண்ணி அஅடிப்பார்அபார் தன்னை அழிப்பார்பார்
இம்மண்ணில் எங்கும்பார் பார்

558)
பழமாக உண்போரைப் போற்றும்; ரசமாக
வேண்டுவோர்க்கு ஊற்றும் அரசு

559)
பாருக்குள் நோக்கும்நம் பிள்ளைகள்; பாருக்குள்
விக்கும்நாள் பார்க்கும் அரசு

560)
மதுமீறிப் போகுமிடம் பேயாய் முதுகேறிப்
பாயும் அகத்திருக்கும் பாம்பு