இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label அவன். Show all posts
Showing posts with label அவன். Show all posts

June 3, 2014

இன்பம் - அவனும் , அவளும் ..!


அவன் :
371)
சொத்தை இருந்தால்தான் என்னஎன் தத்தையிடம்;
சொத்தை எழுதிவைப்பேன் நான்

372)
சொத்தையுள் மெத்தையின் வித்தையின் உத்தியின்
வித்தையை வைத்தது எது


அவள் :
373)
உம்மையொன்று கேட்பேனாம்; உம்மென்று நில்லாமல்
உம்மென்று சொல்வீராம் நீர்

374)
உலகைவசம் செய்வானாம்; நல்லது அவனையே
என்கவசம் ஆக்குவேன் நான்

375)
பாயும் அவன்வேகம் கண்டு மிரண்டொதுங்கும்
பாயும் பயந்து புரண்டு

April 2, 2014

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்



என்னவனே..மன்னவனே..!​

​361)
​​நீர்வார்க்கும் மண்ஆகும் பாத்திரமாய்; பத்திரமாய்

நீர்வாரும்; காய்ந்திருப்பேன் நான்

​362)​
விழிமூடும் வேளையெல்லாம் ​,​ எந்தன் வழிமூடி

முன்வந்து நிற்பான் அவன்

​363)​
ஒளிந்திருப்பான் எங்கோ; உணர்ந்து, மழைக்கால

மண்போல் கரையும் மனது

​364)​
அடக்கிவைப்பேன் எ ​ன்(று)எள்ளி ஆர்ப்பரிப்பான்; மெல்ல

அடங்கித்தான் போவான் பிறகு

​365)​
என்னையன்றி வேறொருவள் வந்தாலும் நீயாவாய்

எண்ணெயின்றித் துள்ளும் கடுகு

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-அறம்


(இறை)அவன் வணக்கம்:

356
அருவில் உருவாய்; கருவில் தருவாய்
மறைந்தே இருப்பான் அவன்

357
உருவில் அருவாய்; தருவில் கருவாய்
உறைந்தே இருப்பான் அவன்

358
வெளியில் வளியாய்; வழியில் ஒளியாய்
நிறைந்தே இருப்பான் அவன்

359
அறியார்க்(கு) அரியன்; அறிதற்(கு) எளியன்
அடியர்க்(கு) அடியன் அவன்

360
வினையறுக்க வேண்டும்; முடிக்கும் வரையில்
துணையிருக்க வேண்டும் அவன்
.

November 22, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்

என்னதான் செய்வேன் நான் ?


286)
பழத்தோடு காத்திருப்பாள் என்றோடி வந்தேன்;
பழத்தோடு தானிருந்த(து) அங்கு

287)
கல்போன்ற சொல்கொண்டு வீசுவாள்; கல்க்கண்டாய்
பூச்செண்டாய் வீழும்என் மேல்

288)
சொல்லும்ஓர் வார்த்தையையும் வாய்க்குள் முடக்கிவிடும்
வெல்லும்கூர் வேலொத்த கண்

289)
தோள்த்தாங்கும் முன்தொங்கும் ஆல்விழு(து); ஆள்த்தாக்கும்
முந்தும்உன் கண்ணீர் விழுது

290)
மின்னஞ்சல் வேகத்தை மிஞ்சும்உன் கண்ணஞ்சல்
கண்டவுடன் அஞ்சும் மனம்