இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


வாழ்க உறவுகள் .. இந்த இழையில் 300 குறள்கள் என்ற இலக்கை அடைதிருக்கிறேன் ... (+ விளக்கக் குறள்கள் 1500 + கையிறுப்பு 200+ = ஆக மொத்தம் 2000 + குறள்கள் :))

4 ஆண்டுகளுக்குமுன்... ஒன்றுமில்லாமல் வேடிக்கைப் பார்க்க வந்தவனை.... ஊக்குவித்து இன்று 2000+ குறள்களுக்குச் சொந்தக்காரனாக மாற்றி வைத்திருக்கும் என் இணைய உறவுகளுக்கு நன்றிக் கடனாக என் செய்யப்போகிறேன் நான் ?

இதுதான் நாம்வாழும் உலகு :

296)
ஒன்றழித்து இன்னொன்று வாழும் உலகிலின்று

ஒன்றுபட்டால் தானுண்டு வாழ்வு

297)
பாதை வழியெல்லாம் பாறை இறைந்திருந்தால்

பாதவலி ஏற்பதுதான் தீர்வு

298)

திட்டம் தெரிந்தோரைக் காட்டிலும் திட்டத்

தெரிந்தோரே வல்லவராம் இன்று

299)

கூசாது கையேந்தும் கீழோர்நம் முன்வந்தால்

பேசா(து) ஒதுங்குதல் நன்று

300)
பாடுபட்டோர் பாதையில் ஓய்ந்திருப்பார்; கேடுகெட்டோர்

போதையில் ஓய்வெடுப்பார் பார்

December 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-அறம்

மழை :

291)

முகில்கண்டு கொட்டும் மழைகண்டு மக்கள்

திகில்கொண்டால் எங்கோப் பிழை



292)

மாறிவரும் காலமிது; சொல்வீரா மண்குளிர

மாரிவரும் காலமெது என்று



293)

கலிகாலம் எல்லாம்ஏன் உன்கண்முன் வீழும்

உழவை ஒதுக்கும் உலகு



294)

ஏரியுள் சேரும் மழைநீர் தரும்சோறு;

கூரையுள் என்றாலோ சேறு



295)

பிழைக்கும் வழியின்றி பள்ளத்துள் வீழும்

மழைநீரைப் பேணா உலகு


November 22, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்

என்னதான் செய்வேன் நான் ?


286)
பழத்தோடு காத்திருப்பாள் என்றோடி வந்தேன்;
பழத்தோடு தானிருந்த(து) அங்கு

287)
கல்போன்ற சொல்கொண்டு வீசுவாள்; கல்க்கண்டாய்
பூச்செண்டாய் வீழும்என் மேல்

288)
சொல்லும்ஓர் வார்த்தையையும் வாய்க்குள் முடக்கிவிடும்
வெல்லும்கூர் வேலொத்த கண்

289)
தோள்த்தாங்கும் முன்தொங்கும் ஆல்விழு(து); ஆள்த்தாக்கும்
முந்தும்உன் கண்ணீர் விழுது

290)
மின்னஞ்சல் வேகத்தை மிஞ்சும்உன் கண்ணஞ்சல்
கண்டவுடன் அஞ்சும் மனம்

November 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்




அன்பும்...அமைதியும் :

281)
அன்பென்னும் ஆயுதம் ஆளுமிட அண்மையின்
முன்பென்றும் வாராது வம்பு

282)
மகிழ்ந்த மனமுடையோர் முன்வாசல் தன்னில்
முகிழ்ந்து வரும்நல் உறவு

283)
அமைதியாய் உள்ளம் சமைந்துவிட்டால் சுற்றி
அமைவ(து) அனைத்தும் விருந்து

284)
நினைப்பதை எல்லாம் நிறைவாய் நினை;உந்தன்
எண்ணம்போல் தானமையும் வாழ்வு

285)
ஒத்து வரவில்லை என்றபின் பேசா(து)
ஒதுங்கி விடுவது நன்று

November 14, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்

எல்லாம் அவளே:



276)
பிணக்கில் விழவைப்பாள்; நானறிவேன் இன்று
கணக்கில் சிலஇழப்பேன் என்று

277)
கொழுந்துவிட்டாள் என்னுள்; இடம்கொடுத்தேன்; பற்றிக்
கொளுந்துவிட்டால் என்செய்வேன் நான்

278)
கண்ணாடி முன்னாடி நான்நிற்பேன்; உள்ளிருந்து
என்கண்ணுள் பார்ப்பாள் அவள்

279)
ஓர்வார்த்தை சொல்லாள்;கூர்ப் பார்வையால் கொல்வாள்;ஆம்
போரின்றி வெல்வாள் இலக்கு

280)
இதழ்சுழிப்பாள்; ஆழ்சுழலில் சிக்கிய பூவின்
இதழாக மூழ்கும் மனது


November 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்



படி:

271)

விவாதத்தை இன்முகத்தால் வெல்லும் விவேகம்
உனக்குண்டு; கண்டு படி

272)
முன்வந்து காத்திருக்கும் நல்வாய்ப்பை உன்வசம்
ஆக்கும் முறையைப் படி

273)
பிழைக்கவழி காட்டும் நிலைக்கவலி ஊட்டும்
உழைப்பே உயர்வின் படி

274)
சிறுமையைச் சேர்க்கவழி சொல்லும் பொறாமையைக்
கொல்லும் வழியைப் படி

275)
மலரா மலராய் மடிந்தென்ன லாபம்;
மலரும் வழியைப் படி

October 31, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்



அன்பே..அன்பே : / இன்பம்
266)
நானாக நீயானால் நீயாக நானாவேன்;
தானாகத் தேனாகும் வாழ்வு


267)
பூவுக்கு நாராக பூமிக்கு நீராக
ஆலுக்கு வேராக வா


268)
உயிரையும் கூறாய்ப் பிரித்து விடுவார்;
இயலுமா நம்உறவை கூறு


269)
சோர்வில் தலைசாய்த்தால் ஆகுமடி உன்மடி
சொர்க்கத்தின் வாசற் படி


270)
பக்கமில்லை என்றால்தான் என்னவாம்; என்மனப்
புத்தகத்தின் பக்கமெல்லாம் நீ

October 25, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




கடன் :/பொருள்
261)
கடலுக்குள் ஆழ்ந்தவர்க்கும் வாய்ப்புண்டாம்; இல்லை
கடனுக்குள் வீழ்ந்தவர்க்கு வாழ்வு

262)
கடனில்லாக் கூழ்கால் வயிறு கிடந்தால்
கடக்கும் பலநாள் இனிது

263)
திரண்டுருண்டு பேருவம் கொண்டுன்னைக் கொல்ல
வரும்வாங்கும் குட்டிக் கடன்

264)
இடம்செல்வம் சூழ்ந்தநல் வாழ்வை விடவும்
கடனில்லா ஏழ்மை சிறப்பு

265)
வீட்டை அடகாக்கி வாங்கித் திளைப்போர்க்குக்
’கேட்’டில் இடமுண்(டு) உணர்

October 18, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்



உலக நடப்பு : /பொருள்
256)
மொந்தையின் உள்இருந்தால் பாலேதான் என்றாலும்
கள்ளெனவேக் கொள்ளப் படும்


257)
தடையில்லாப் பாதையில்நீ தொட்டதெல்லாம் வெற்றியென்றால்
உன்தேர்வின் மேல்ஐயம் கொ
ள்

258)
மூடும் கதவைக் கவனிக்கும் கண்ணறியா(து)
ஆடித் திறக்கும் கதவு


259)
சிரம்தாழ்த்தி சிந்தனையால் நோக்குவது; வாழ்வின்
சிரமத்தைப் போக்கும் வழி


260)
கெடுவதுபோல் தோன்றிடினும் உச்சத்தைத் தொட்டுவிடும்;
விட்டுக் கொடுத்தவன் வாழ்வு

October 17, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




ஊடல்...சிறிதே ஊடல்...என்றாலும் !
/இன்பம்

251)
எதிர்வர வேண்டுமெனத் தானெதிர் பார்த்தேன்;
எதிரியாய் வந்தாளே முன்


252)
பந்தம்தான் உண்டாக்க வந்தாய் என்றிருந்தேன்;
பந்தம்ஏன் கொண்டுவந்தாய் நீ


253)
ஆற்றுக்கு போகிறாள் யாரோடோ; ஆறோடும்
போனால் என்ன எனக்கு


254)
நீராடப் போகிறாள் ஆற்றுக்கு; நீரோடு
போனால் மகிழ்ச்சி எனக்கு


255)
துடிப்பாய் நடப்பாள்; துடுக்காய் இருப்பாள்;
கடுக்காய் கொடுப்பாள் எனக்கு

October 9, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்


சொல் /பொருள்

246)
செல்லும் இடத்தில்உன் சொல்செல்லும் தன்மையின்
உண்மை அறிந்துபின் சொல்

247)
சோதனையில் உள்ளோர்முன் நாம்செய்த சாதனையைப்
போதனை செய்யாமல் செல்

248)
மந்தைவெளி முன்நின்று சிந்தைவழி செல்என்(று)
உரைத்தால் பயனென்ன சொல்

249)
நாவினைச் சேர்ந்ததல்ல சொல்வலிமை; கேட்டறியும்
காதினைச் சார்ந்த(து) அது

250)
துடித்தும் வெடித்தும் எதிர்க்கும் பொழுதும்
தடித்தசொல் வேண்டாம் தவிர்

October 3, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்


மகிழ்வில், மனமுறிவில் சில ‘போ’க்கள்..:


241)
தாழும் பொழுதுன்தோள் தூக்கஆள் வந்துநின்றால்
வாழ்நாளை வென்றவன்நீ போ

242)
தன்னலம் இன்றிச் செயல்புரிவோர்க்(கு) எல்லாமும்
தன்னால் அமைந்துவிடும் போ

243)
காத்திருந்தால் வாராது வாழ்வு; உனைச்சுற்றி
காற்றிருந்தும் வீசாது போ

244)
காலின்கீழ் மட்டுமே சுத்தமெதிர்ப் பார்க்காதே;
கீழ்க்குணத்தின் கீழ்அது போ

245)
உன்னை அறியாமல் உண்மை புரியாமல்
வாழ்ந்து பயனென்ன போ

September 25, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




உனக்குள் இருப்பவனை உணர் :
/பொருள்
236)
எதிரியாய்த் துள்ளும் எவனையும் வீழ்த்(து);உன்
எதிர்வந்(த) எமனையும் சேர்த்து

237)
தருணம் எதிர்பார்த்தென் தோள்தொங்கும் அந்த
மரணத்தைக் கொல்வேன்ஓர் நாள்

238)
அறிவோம் எதிர்தளை; வந்துவிடும் வேளை;
அரிவோம் எதிரின் தலை

239)
எவனென்றால் என்ன; எமன்வந்தான் என்றால்தான்
என்ன; எதிர்கொண்(டு) எழு

240)
அறியாதென் முன்வந்து தோற்றோடும் யாரும்
அறியார்நான் தான்வாலி என்று

September 22, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




காதல் :
/ இன்பம்


231)
படித்தாள் தெளிந்தேன்; கொடுத்தாள் இழந்தேன்;
அடித்தால் அலையாவேன் நான்

232)
காது வழிகேட்டு காதலின் மேல்ஐயம்
கொள்வதெல்லாம் காதலா காது

233)
ஆதலால் காதல்செய்; சாதலில் வீழாது
காதலால் வாழும் உலகு

234)
காதலில் தோல்வியில்லை; வீழ்தல்தான் வெற்றியிங்கு;
ஆதலால் காதலில் வீழ்

235)
உலக அழகியைப் போல்காட்டும் உள்ளூர்க்
கிழவியையும்; காதலிக்கும் கண்





September 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்



ஏன் ...?!/ பொருள்

226)
கையூட்(டு) எனும்கள்ளம் அன்பளிப்பாய் மாறியின்று
கட்டணம் என்றானது ஏன்

227)
மரம்விதைத்து சாலைசென்ற(து) அன்றுதான்; இன்று
மரம்புதைத்த சாலைகள் ஏன்

228)
பெருக்கியள்ளும் குப்பையை வீதியில் வீசிவரும்
குற்றமற்றத் தன்மைவந்த(து) ஏன்

229)
தனித்தனியாய் வாழும் முறைதான் இனிதென்னும்
எண்ணம் உருவான(து) ஏன்

230)
கோடிகள் மொத்தமும் நாட்டிலுள்ள கேடிகளை
மட்டுமே நாடுவ(து) ஏன்

September 18, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்


வில்லி:/இன்பம்
221)
கசக்கி எறிந்தாள்; எரிந்தாலும் என்னுள்
கசக்கா(து) அவளின் நினைவு

222)
வீழ்ந்துவிடும் எண்ணத்தில் நானிருப்பேன்; எப்படியும்
வீழ்த்திவிடும் நோக்கில் அவள்

223)
நாசுக்காய் உள்ளம் நசுக்குவாள்; சொல்லாமல்
நாசம் விதைப்பாள் அவள்

224)
விடைத்தாள் எனக்குள்; விதிகள் மறந்தேன்;
விடைத்தாள் முழுதும் அவள்

225)
என்னவென்ற கேள்வியுடன் நின்றிருப்பேன்; ஓர்நொடிக்குள்
என்னைவென்று சென்றிருப்பாள் பெண்

September 15, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என் குறள்



படி, அதுதான் படி :/பொருட்பால்
216)
வேதமோ வாதமோ எண்ணத்தைச் சேதமின்றி
சொல்லும் வழியைப் படி


217)
புனிதராய் மாற முயலா(து) உலகில்
மனிதராய் வாழப் படி


218)
காடுசொல்லும் வாழ்க்கை முறைபடி; வீட்டுக்குள்
வாழும் உணர்வைப் படி


219)
உழைப்பைச் சுரண்டும் பிழைப்பை, மிரட்டி
அழிக்கும் வழியைப் படி


220)
பெரியோரின் சொற்படி நன்குபடி; ஆகுமடி
சொர்க்கத்தின் வாசற் படி

September 13, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்


வாக்கும் நாக்கும் : / பொருள்

211)
பானம் பருகிய பின்சொல்லால் பாணம்
தொடுக்கும்வில் ஆகிவிடும் நாக்கு

212)
இதயத்தில் தொக்கிக் கிடப்பதுதான் நாக்கில்
உதித்து வெளியே வரும்

213)
சொல்வாக்கு சுத்தம் இருக்கும் இடம்தேடி
செல்வாக்கும் ஓடி வரும்

214)
வாக்கால் உயர்வடைய வேண்டுமெனில் முன்துள்ளும்
நாக்கிற்குப் போடு தடுப்பு

215)
வாக்கால் இணைந்துவிட்டால் நம்முள் வருமாமோ
வாய்க்கால் தகராறு கூறு

September 8, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



எல்லாமும் ஆவாளே இல்லாள் :/இன்பம்
( நாளை எங்கள் மணநாள் : அவளுக்கு என்குறளைப் பரிசாகக் கொடுத்துப் பதிலுக்கு அவள்குரலைப் பெறுவேன் .... வாழ்த்துங்கள் எங்களை :)

206)
தாய்பத்துத் திங்கள்தான்; தன்னாயுள் தாண்டியும்
என்னைச் சுமப்பாள் இவள்


207)
நான்வந்து தோள்சாய்க்கும் ஏணியவள்; தான்வந்தென்
தோள்சாயும் தோழி அவள்


208)
நெடும்தூரம் எல்லாம் நொடியில் தொடும்தூரம்
ஆகுமவள் வந்த பிறகு


209)
துயில்கிறது கண்ணிரண்டு; நாணும் மயிலிறகு;
தானும் அழகில்லை என்று


210)
சிறுவெள்ளை வானில் இருநிலவு; வட்டக்
கருநிலவு என்னவளின் கண்

September 7, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



கடவுள் வாழ்த்து :அறம்
201)
நேற்றாகி இன்றாகி என்றும்தான் என்றாகி
நிற்பானின் தாள்வணங்கிப் போற்று

202)
இடத்தைத் திறப்பார் வலத்தை அடைப்பார்;
தடத்தை அறிந்துகொள் நீ

203)
காட்டுவார் என்றெதிர் பார்த்தால் அதுஇயல்பு;
ஊட்டுவார் என்றிருந்தால் தீது

204)
எண்ணம் நிறைவேற வில்லை யெனில(து)
இறைவனின் எண்ணமென்று கொள்

205)
அர்ச்சனை இல்லாத ஆலயம் காட்டும்
பிரச்சனை இல்லா உலகு

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / என்குறள்



வாழ்க உறவுகள்

எனது சகோதரர்கள் பாஸ் என்னும் பாலாஜி பாஸ்கரன் அவர்கள் தூண்டிவிட,ப்ரசாத் வேணுகோபால் தலையில் தட்டி தளைத் திருத்தம் சொல்ல
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் மாதம் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன் ... இதோ ...இன்று நின்று திரும்பிப் பார்க்கிறேன்....10 மாதங்கள்..உங்களின் உற்சாக உந்துதலினால் ...200 குறள்கள் முடித்திருக்கிறேன்... :))
மாதம் 20 :))
(# இதில் எத்தனைதான் தேறும் என்பது வேறு கணக்கு )

”குறள் அமைப்பை ஒத்துத்தானே இருக்கிறது ?
ஏன் குறள் போல என்று ஐயத்தோடு தலைப்பு? மாற்றுங்கள்! ”
- என்ற பெரியவர்களின் அறிவுரையின்படி தலைப்பை மாற்றி இருக்கிறேன் ..
( முதலில் என்மேல் எனக்கில்லாத் நம்பிக்கையின் வெளிப்பாடு அது ... யாராவது ‘என்னய்யா இது ?’ என்று கேட்டால் அந்த ‘போல’வைக் காட்டித் தப்பித்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருந்தேன் :இன்னும் பலருக்கு இந்த ஐயம் உள்ளது என்றே நினைக்கிறேன்.. கேட்காமல் இருக்கிறார்கள்..அவ்வளவுதான் : ))

தொடர்ந்து வழிகாட்டுங்கள் ... பயணிக்கக் காத்திருக்கிறேன்

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..!

September 1, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



அறிந்ததைச் சொல்லவா ?

196)
நித்தம் கிடைத்தால் அதுமுத்தம் என்றாலும்
தித்திக்கா(து) என்ப(து) உணர்


197)
தீராத கோபமுன்னை சேரா(த) இடம்சேர்க்கும்;
போராக்கித் தான்முடியும் நம்பு


198)
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு


199)
உரல்குழிக்குள் போய்விழுவார்; பின்விழித்தால் குத்தும்
உலக்கைமேல் சொல்வார் பழி


200)
வகைக்குள் உனைத்திணித்தால் உண்டாகும் உட்பகை;
தீயின்றி ஏது புகை.


August 29, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




’அ’ தந்தான் ’ஆ’சான் :



191)
கொற்றவன்முன் கற்றவன் நிற்பான் பயம்துறந்து;
கொற்றவன் நிற்பான் பணிந்து


192)
மானவன்தான் என்றாலும் முன்பவனும் ஓர்குருவின்
மாணவன்தான் என்ப(து) அறி

(மானவன் = அரசன், வீரன், தலைவன்)

193)
படிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்பார்:
படிக்கல்லாய் ஆவாய் உணர்


194)
தருவது மட்டுமே தன்செயல் என்னும்
குருவிற்(கு) இணையில்லை இங்கு


195)
புரியாமல் கற்கும் எதுவும் நிலைக்கா(து)
அதுவாகும் நீர்மேல் எழுத்து

August 25, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


குட்டிக் கதை சொல்லவா ?

186)
தேன்தான் கொடுக்குமென்(று) எண்ணித் தொடராதே;
தேனீக்கும் உண்டாம் கொடுக்கு


187)
ஓடி ஒளிந்துவிடும் பாம்பைக்கை யால்பிடித்தால்
ஆடி அடங்கிவிடும் வாழ்வு


188)
எலிஅழுதால் பூனை விடாது; வலிக்க
எதிர்த்தால் பிறக்கும் வழி


189)
புலியில்லா ஊரில் தெருவெல்லாம் கூத்தாம்;
எலிதான் நடத்தும் அரசு


190)
ஐந்தடக்கி நிற்கும்; உறுமீன் வரும்வரையில்
சைவமாய்க் காத்திருக்கும் கொக்கு

August 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


கோபத்தில் அவளிருந்தால் ...!

181)
வானம் பறக்க முயல்வேன்நான்; ஐயத்தில்
வானம் பறிப்பாள் அவள்


182)
கேள்விக் குரிய பதில்பலக் கொண்டவளாம்
கேள்விக் குறியாம் அவள்


183)
நாளை வருவேன் எனச்சொல்வாள்; நான்நம்பி
நாளையெண்ணிக் கொண்டிருப் பேன்


184)
ஆத்திரத்தில் பேசா(து) இருக்கும் அவளறிவாள்
பாத்திரத்தால் பேசும் மொழி

185)
”வழிபடு என்றுன்னை வேண்டவில்லை; போகும்
வழிவிடு போதும் எனக்கு”

August 20, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அறி.. நீயாவாய் அரி :
176)
உதறிக் கழித்த பொழுது கதறி
அழுதாலும் மீளா(து) அறி


177)
மணக்கும் மலரைப் பறிக்கும்முன் முள்ளின்
குணத்தை முதலில் அறி


178)
தடுமாறும் போதெல்லாம் தோள்கொடுக்க உன்தடத்தில்
பாரியின்தேர் வாரா(து) அறி


179)
கொடுக்கும் குணத்தைக் கெடுப்போர் இடுப்பின்
உடுப்பை இழப்பார் அறி


180)
அச்சாணி இல்லாமல் சக்கரம் முச்சாணின்
முக்கையும் தாண்டா(து) அறி

August 16, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


ஏன் ஏங்க வைக்கிறாள் இவள் ? :
171)
விரகம் இறுக்க விரைவான் அவனும்;
விரதம் இருப்பாள் அவள்


172)
ஏமாறத் தான்வேண்டும் நானின்றும்; ஏன்மாற
வில்லையாம் இன்னும் அவள்


173)
வாய்ப்போடு வந்தமர்ந்தேன்; வாய்ப்பாடு கேட்டுவிட்டாள்;
வாய்ப்பூட்டுள் சிக்கியது நாக்கு


174)
இல்லாள் பெருமையைக் கேட்காமல் சொல்லும்
அவளருகில் இல்லாப் பொழுது


175)
செல்லக் கிளிச்சொல்லைக் கேளாமல் வந்தஎன்னுள்
மெல்லப் படரும் கிலி


August 14, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அறிந்ததைச் சொல்லவா உனக்கு ?

166)
எள்வேண்டும் என்போர்முன் எண்ணையுடன் சென்றால்உன்
எண்ணம்மேல் குற்றம் வரும்

167)
மண்ணில் எதிர்பார்க்கும் மாற்றம் எதையும்நீ
உன்னில் இருந்தே தொடங்கு

168)
பூவுள் மறைந்திருக்கும் நாகம்;உன் நாவுள்
மறைந்திருக்கக் கூடும் விசம்

169)
விசாலமாய் ஆக்குன் மனதை; உறவின்
விலாசமாய் மாறும் அது

170)
பிறர்குறையை நக்குவதைக் காட்டிலும் தன்கறையை
நீக்கினால் சேரும் சிறப்பு

August 9, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இயற்கையே இவள்தானோ !

161)
மேகம்போல் மூண்டாள்; கொடும்பூதம் போல்சூழ்ந்தாள்;
வேகமாய் என்னுள் மழை

162)
எண்ணமெல்லாம் என்னவள்; சேர்ந்திடும் நாள்வரை
வண்ணமில்லா வானவில் நான்

163)
கோடை வெயிலிலும் கொஞ்சியவள் வந்துநின்றால்
வாடைக் குளிர்தான் எனக்கு

164)
பக்கென்றுப் பற்றிவிடும் தொட்டவுடன்; பாவிமகள்
பத்து விரலும் திரி

165)
வீழ்ந்துவிடும் எண்ணத்தில் நான்;வீழ்த்தும் திண்ணத்தில்
நீளும் அவளின் கனவு

August 6, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



அறிந்து கொள், அறியாமையைக் கொல்:
156)
தங்கி இருத்தலும் தேங்கிக் கிடத்தலும்
ஒன்றல்ல என்ப(து) அறி

157)
தனித்துவந்தோம் என்று தவறாய்க் கணித்துத்
’தணிந்துபோ’ என்போரை வீழ்த்து

158)
புலியின்மேல் உள்ள வரிகள் அனைத்தும்
தழும்பல்ல என்ப(து) அறி

159)
பத்துக்குள் ஒன்றென்று முங்காது; நான்தான்
பதினொன்(று) எனமுந்தி வா

160)
உள்க்காயம் ஏற்கப் பழகு; துளையின்றிப்
புல்லாங் குழலும்தான் ஏது

August 3, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


கனவே நினைவாக :

151)
அசத்தல் கனவு; வசமாக்க வந்தாள்;
நிசத்தில்என் முன்னால் நிலவு

152)
உன்னைஉள் வாங்கும் பொழுதெல்லாம் நான்பெறுவேன்
விண்ணைவில் ஆக்கும் திறன்

153)
வந்தணை என்றவரம் வேண்டுவேன்; தந்தவுடன்
வந்தனை செய்வேன் பணிந்து

154)
தழுவல் விலக்குவாள்; தள்ளித் தவழ்வாள்;
நழுவுமென் காலின்கீழ் வாழ்வு

155)
எதிரிருந்தும் இல்லை இழுத்தணைக்கும் வாய்ப்(பு);என்
எதிரிக்கும் வேண்டாமிவ் வாழ்வு

July 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


தெரிந்ததைச் சொல்வேன் :)
146)
தோளின் வலிமைதான் பேரழகு; கண்மூடித்
தோலின்முன் வீழும் உலகு

147)
வலியறியாப் பாறையையும் போகும் வழியறியாப்
பாதையையும் தேரா(து) ஒதுக்கு

148)
திசைஎல்லை எல்லாமும் தேர்ந்தும் விசையில்லை
என்றால் தவறும் இலக்கு

149)
பிஞ்சில் பழுப்பதற்(கு) அஞ்சு; வகுத்ததை
மீறும் எதுவுமே நஞ்சு;

150)
திக்கெட்டைத் தாண்டி சிறகை விரித்தாலும்
கொப்பில் உறங்குமாம் கொக்கு

July 16, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


என் உலகம் :
141)அப்பா :

சிந்தனையின் வித்தவர்; நீவாழ தன்னையே
விற்றவர்;உன் தந்தையைப் போற்று

142) அம்மா :
மடியில் வளர்த்தாள்; வடிவம் கொடுத்தாள்
விடியல் அவள்தான் உனக்கு

143)
உறியாய் தறியாய் திரியாய் இருப்பாள்
உயிரும் தருவாள் உனக்கு

144)
கொடியிலுயிர் தந்து மடியிலூண் தந்துன்
படியாய் இருப்பாள் பணிந்து

145) இரண்டாவது அம்மா :
நிலவுக்கும் உண்டாம்ஓர் நாள்ஓய்வு; நில்லாள்;
நிலவுக்கும் மேலாம் இவள்

July 14, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உள்ளத்தில் உள்ளதைச் சொல்வேன் :

136)
நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி

137)
தூங்க முடியா நிலைவரும்; தாங்க
முடியா பொருள்சேரும் போது

138)
வனத்துள் அலைந்தாலும் அந்திமத்தில் கொண்ட
இனத்துள் அடைந்தால் சிறப்பு

139)
நிறத்தால் உயராதாம் உன்தரம்; உள்ள(த்)
திறனைத்தான் சார்ந்த(து) அது

140)
நம்புவ(து) எல்லாமும் நன்றென்(று) இருப்பதில்லை
நன்றென்று தோன்றுவதை நம்பு

July 11, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


என்னவளே...எல்லாமும் ஆனவளே:


131)
கட்டுவாள்; பின்பதறித் தன்கையால் பொத்துவாள்;
குத்திவெளி வந்திருக்கும் என்று

132)
கொடுத்திணைத்தாள் வந்து; பிடித்தணைத்தாள் தந்து;
கொடுத்ததைக் கேட்பாளோ பின்பு

133)
தன்னைக் கொடுத்தவுடன் என்னை எடுத்துவிட்டாள்;
உண்மையில் யாருக்(கு) இழப்பு

134)
சந்தேகம் ஏதுமில்லை; உன்தேகம் மட்டும்தான்
என்தாகம் தீர்க்கும் விருந்து

135)

சேர்வோம் எனும்உன்ஓர் சொல்தானே என்மனச்
சோர்வை அகற்றும் மருந்து

( நன்றி : கரு : எம் முன்னோர் :)

July 8, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




கண்ணென்ன கண் :


126)
நாணுமவள் கண்பார்க்க நானும்தான் காத்திருப்பேன்;
நாளும் நிகழும் இது

127)
மரம்கொத்தும் கூர்அலகும் மண்டியிட்டுத் தோற்கும்
மனம்குத்தும் உன்ஓர்கண் முன்பு

128)
மைபூசும் உன்கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்
பொய்பேசும் உன்உள் மனது

129)
கண்டவுடன் பற்றிவிடும் கற்பூரத் துண்டு
கலந்த கலவையவள் கண்

130)
சீர்கெடுக்கும் மையிட்டக் கண்ஒன்று; சீர்கொடுத்தென்
சீக்கெடுக்கும் மற்றது வந்து

July 3, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


முதுமை அழகு :

121)
கணக்கில்லை என்னவர் காட்டும் இடக்கு;
கனக்கவில்லை இன்றும் எனக்கு

122)
இறுக்கம் நிறைந்த(து) இளமை! இருக்கட்டும்!
இந்தச் சுருக்குக்கே(து) ஈடு

123)
முகவரி இல்லாது முன்புண்டு; இன்றுன்
முகவரிக்குள் வாழ்கிறேன் நன்று

124)
எனக்கென வீழும் முதல்மழையும் நீ!எனக்குள்
வாழும் முதல்துளியும் நீ

125)
அன்று பதுமையாய் நீஅழகு: இன்றுன்
முதுமை அழகோ அழகு

June 30, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உழவும் , உலகும் :

116)
சாகும் படித்தூண்டும்; நீரின்றிக் காய்ந்திருக்கும்
சாகுபடி இல்லா நிலம்

117)
விருந்து சிறக்கும்; விதைப்பை சிறுக்கும்,
விதைப்பை நிறுத்தும் அளவு

118)
"கதுரடிச்ச காடெல்லாம் வீடாச்சு; போகும்
சதுரடிக்கு நல்ல விலை"

119)
விதையுண்டு நீருண்டு; நல்விலை இன்றேல்
புதையுண்டு போகும் உழவு

120)
முன்னோரும் மூவேந்தும் போற்றிவைத்த மண்மரபைக்
காக்கும் முறையை அறி


....தொடர்வேன் ... ;>)

June 25, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அவல்..அவள். .அவல்:)

106)
நினைவிலவள் வந்தவுடன் பெய்து நனைக்கிறதென்
தோட்டத்தை மட்டும் மழை

107)
விழியென்னும் வேலெய்து வீழ்த்தினாள்; வீழ்ந்தும்
வலியில் உணர்ந்தேன் இதம்

108)
வருவாய் வடிவெனக் காத்திருந்தேன்; வந்த
விடிவோ வருவாய் இழப்பு

109)
கொல்லையில் பூத்திருக்கும் முல்லைக்கும் உண்டு;உள்ளம்
கொள்ளை அடிக்கும் திறம்

110)
மங்கைக்கென் மீதேதோ கோபம்: நிகழ்வெண்ணி
மங்கத் தொடங்கியதென் கண்


..விடாது வருவேன்..:)

June 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


தமிழ் வாழ்த்து :
101)
புகழ்வோர்க்கும் நின்றே இகழ்வோர்க்கும் நன்றே
நிகழ்த்திடுவாள் என்தமிழ்த் தாய்

102)
கொன்றாலும் மென்றுநீ தின்றாலும் நின்று
நிலைத்திடுவாள் என்தமிழ்த் தாய்

103)
கழுத்துக்கும் கொண்ட எழுத்துக்கும் ஆயுதம்
கண்ட(து) எமது தமிழ்


குறள் வாழ்த்து :
104)
திருமால் திருவடிக்கும் அய்யன் இருஅடிக்கும்
மிஞ்சிய(து) ஏதுமுண்டோ இங்கு

105)
சித்தரும் ஈசனும் நேசனும் புத்தரோ(டு)’
அல்லாவும் ஏற்பார் குறள்

June 16, 2012

இருவரியில் சொல்வேன்...குறள் போல சில.....!



நம்பிக்கை :

96)
எதுவும் நிலையில்லை என்ப(து) உணர்ந்தார்க்(கு)
எதுவும் மலையில்லை இங்கு


97)
முயலா முயலுக்கு முன்செல்லும் ஆமை;
இயலும் வரையில் முயல்


98)
முயல்பவரின் முன்நிற்கும் வெற்றி; தயங்குபவர்
பின்சென்(று) ஒளியும் அது


99)

தேவையெல்லாம் தத்தளிப்போர்க்(கு) ஓர்துடுப்பு; தேவையில்லை
அங்குகுளிர் காயும் அடுப்பு


100)
எளிதன்(று) எனமலைத்(து) ஏங்குகிறேன்; எல்லாம்
எளிதென்று சொல்வீரா வாழ்த்து


(# சதமடிதிருக்கிறேன் ...எத்தனை கணக்கில் வருமோ தெரியவில்லை :))

May 3, 2012

பொன்னியின் செல்வன் 100 : ராசராசனுக்கு என் (வெண்)பாமாலை...2



பெருமையின் பெருமை அவன் :
பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நாளில்
பெரும்திரளாய் பொங்கியமெய் கீர்த்தியை கண்ணசைவில்
கொன்றான்; ’அடியேன் சிவபாத சேகரன்’
என்றுரைத்து நின்றான் நிலைத்து (8)

சேனை புடைசூழ பொற்கவசம் பட்டுடுத்தி
யானைமேல் சுற்றுவான் சோழமன்னன் முன்பிங்கு;
வெண்ணிற ஆடையுடன் வெற்றுடம்(பு) என்றாலும்
வின்நிறைந்து நிற்கிறான் இன்று (9)

பொறுமையின் சிகரமானவன் :
அருண்மொழி வர்மனுக்(கு) ஆளும் உரிமை
இருந்தாலும் சிற்றப்பன் இச்சைக்(கு) அருமை
அரியணையை விட்டுத் துறந்த பெருமை
பொறுமைக்கு நல்லதோர் காட்டு (10)
(சிற்றப்பன் = உத்தமச் சோழன்)

கலங்காது காத்திருந்தால் காலம் கனியும்;
உலகாளும் வேளை ஒருநாள் வருமென்றும்
எண்ணிரண்(டு) ஆண்டுகள் கொக்கெனக் காத்திருந்து
திண்ணமாய் வென்றான் அரசு (11)

வேந்தென்றாலும் பாசத்தில் வீழ்ந்தவன் :
ஆதித்த சோழன் கொலைச்சதித் திட்டத்தைப்
போதித்த காந்தளூர்ச் சாலையின்மேல் போர்த்தொடுத்து
மொத்தமாய் வென்றொழித்து சுத்தமாய் நின்றழித்து
ரத்தப் பழிதீர்த்தான் வேந்து (12)

வாழ்வளித்த ஆதித்த சோழனை வஞ்சித்து
வீழ்த்திய சுற்றத்தை வேரோ(டு) அறுத்து
குலத்துடன் பேரரசைத் தாண்டித் துரத்தி
புலம்பெயரச் செய்தான்எம் வேந்து (13)
(ஆதித்த(கரிகால்)சோழன் = ராசராசனின் அண்ணன் )

வந்தியத் தேவன் அருண்மொழி வர்மனுடன்
குந்தவை வானதி பூங்குழலி மாதேவி
ஆதித்த சோழனும் நந்தினியும் உள்நுழைந்து
பாதிக்கா தாருண்டோ இங்கு (14)
(சோழன் பெருமையை தமிழகத்தின் கடைக்கோடிவரையிலும் எடுத்துச் சென்ற
ஐயா. கல்கி அவர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்)


...........2

May 2, 2012

பொன்னியின் செல்வன் 100 : ராசராசனுக்கு என் (வெண்)பாமாலை...!


அன்பு உள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள் :
ஒரு மாமன்னனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளின் தொகுப்பு இது......
குறிப்புகள் தவறாகத் தோன்றும் இடங்களில் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள் ........காத்திருக்கிறேன்

அருண்மொழி வர்மனாய்ப் பிறந்து
ராஜராஜ சோழனாய் இருந்து
சிவபாத சேகரனாய் நிறைந்து
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
கோடி இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்
எம் மன்னவனுக்கு
நூறு பாடல்கள் கொண்ட
ஒரு பாமாலை அமைக்கும் முயற்சி இது .........

சிவனுக்கும் ...அவனுக்கும் ..
சித்தம் இதுவென்றால்
இவன்மூலம்அத்தனையும் நடந்தேறிவிடும்...



பொன்னியின் செல்வனுக்கு ஒரு பாமாலை

மெய்க்கீர்த்தி :
அருள்வழியும் குந்தவையின் அன்பினை உண்டான்;
அருண்மொழி என்னும் இயற்பெயர் கொண்டான்;பல்
ஆயிரம் ஆண்டுகடந்(து) ஓங்குமவன் கீர்த்திநின்று;
பாயிரம்நான் பாடுகிறேன் இன்று (1)

’திருமகள் போல’ எனத்தொடங்கி நிற்கும்
முதலிரண்டு மெய்க்கீர்த்தி; இன்றும் முதற்போரில்
’காந்தளூர்ச் சாலைக் கலமறுத்த’ எம்குல
வேந்தனின் வீரத்தின் சான்று (2)

மதுரையை வீழ்த்தியபின் கொல்லம் அழித்து
கொடுங்கோளூர் வென்று கடல்கடந்து கால்பதித்த
மும்முடிச் சோழனின் மூன்றாம்மெய்க் கீர்த்தியது
நம்முன் உரைக்குமவன் மாண்பு (3)

கட்டடக்கலை :
கொஞ்சும் அழகினை கல்லினில் கண்டவன்;
மஞ்சினை மிஞ்சிடும் கோபுரம் கொண்டவன்;
தஞ்சையின் மூத்தவன்; பாரில் எவரையும்
விஞ்சியவன் எங்களின் வேந்து (4)

ஒருநூறோ(டு) ஐம்பதடி சேர்ந்திணைந்த கோவில்;
இருநூறில் பத்தொழித்(து) ஓங்கும் விமானமது;
ஏழ்பிறப்பும் மீள்பிறந்து கண்டு களித்திட
ஏழாண்டில் கட்டினான் வேந்து (5)

பெரும்கோவில் சிற்பியை பாராட்டிப் போற்றி
பெருந்தச்சன் என்றபெரும் பட்டம் அளித்து
தனக்கிணையாய் கல்வெட்டில் ஒன்றாய்ப் பதித்த
உனக்கிணை இல்லையாம் இங்கு (6)

கலிங்கம் நுளம்பம் தடிகைகங்கை பாடியுடன்
கொல்லமும் காந்தளூர் ஈழத்தைப் பற்றியதில்
இல்லை சிறப்பு; கருங்கல்லில் சிற்பக்
கலைவளர்த்த மாண்பே சிறப்பு (7)

(அமைப்பு : இன்னிசை)
(தொடரும்....

May 1, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


நாட்டு நடப்பு :
91)
பலவேசம் காட்டும்; பலவாசம் கூட்டும்;
இலவசம் கண்டால் பதுங்கு

92)
ஆற்றில் படகிருந்தால் போற்றித் தலைவணங்கு;
ஊற்றிலது கண்டால் ஒதுங்கு

93)
நெஞ்சில் நிலைக்கும்;கால் நீட்டும் வரையிலும்
பிஞ்சில் புகட்டும் கருத்து

94)
விலையேற்றம் பாழும் நிலத்துக்கும் உண்டு;
நிலைமாற்றம் என்ப(து) இயல்பு

95)
பழிகூறிப் பம்முதல் பண்பாமோ?; பாரில்
வழியறியாப் பாதையும் ஏது!

April 9, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


இல்லாள் :
(81)

‘தங்க’ மயில்வருமா என்றேங்கிக் காத்திருந்தேன்;
வந்ததோ ‘தங்கமயில்’ ஒன்று

(82)
இனியவள் தேனின் இனியாள்; இனியவள்
இல்லா(து) இனியில்லை வாழ்வு

(83)
விறகாய் இருந்தேன்; பிளந்தே நுழைந்தாள்
சிறகாய் விரிந்த(து) எனக்கு

(84)
போகாப் பொழுதெல்லாம் பாவையின் அண்மையில்
போதாத(து) ஆன(து) எனக்கு

(85)
நிழலையும்மண் தீண்டும்முன் தாங்குவேன்; அன்பே
மழலைநீ என்றும் எனக்கு

(86)
தண்டில் இருந்தாலும் மொட்டுக்கு வண்டின்
வரவுதான் சேர்க்கும் சிறப்பு :)

(87)
நொந்துபோய் நின்றாலும் வந்தவள் தாங்கினால்
சொந்தமாய்த் தோன்றும் உலகு

(88)
உண்மைபோல் பொய்யாய்என் முன்நடிப்பள்; உண்மையில்
மெய்க்குள் துடிக்கும் எனக்கு

(89)
வலியை விரட்டும் வழியை அறிவாள்;
வலியதாம் ‘இல்லாள்’ மனது

(90)
மின்னலைப் போல்இணைந்தாள்; என்னுள் பிணைந்(து)இனி
இன்னலைத் தீர்ப்பாள் துணிந்து

April 7, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


நாட்டு நடப்பு :
76)
செல்பேசி வண்டியில் நீசென்றால்; சொல்லாமல்
வந்துன்முன் நிற்பான் எமன்

77)
குறிகேட்டால் வேண்டுவ(து) ஆகா(து); இலக்கைக்
குறிவைக்க வேண்டும் அதற்கு

78)
இல்லாமை இல்லாமல் போக்கிட இல்லையென்ற
சொல்லையே இல்லாமல் ஆக்கு

79)
வீழ்ந்தவுடன் முற்றா(து) எதுவும்; எழுந்துநின்று
வாழ்வதற்குத் தானே பிறப்பு

80)
வண்ணமுண்டு; எண்ணமுண்டு; உன்மனத் திண்மையின்றேல்
மண்ணாம் வரையும் படம்