இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 27, 2014

இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்


விழி,அறி...! :)

366)
விடியும் வரையில் முடங்கிக் கிடந்தால்
விரைந்து முடியும் பொழுது

367)
முடிந்த வரையில் முடக்கம் தவிர்த்தால்
விரைந்து விடியும் பொழுது

368)
தலையில் இருந்தால்தான் கூந்தல்; தரையில்
கிடந்தால் அதன்பெயர் வேறு

369)
பாதி வரையும் படித்தறியும் பாடம்தான்
மீதி வழியின் விளக்கு

370)
ஒருவிரல் முன்சுட்ட மற்றதுமேல் நோக்க
மறுமூன்றும் காட்டும்உன் நெஞ்சு

April 2, 2014

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்



என்னவனே..மன்னவனே..!​

​361)
​​நீர்வார்க்கும் மண்ஆகும் பாத்திரமாய்; பத்திரமாய்

நீர்வாரும்; காய்ந்திருப்பேன் நான்

​362)​
விழிமூடும் வேளையெல்லாம் ​,​ எந்தன் வழிமூடி

முன்வந்து நிற்பான் அவன்

​363)​
ஒளிந்திருப்பான் எங்கோ; உணர்ந்து, மழைக்கால

மண்போல் கரையும் மனது

​364)​
அடக்கிவைப்பேன் எ ​ன்(று)எள்ளி ஆர்ப்பரிப்பான்; மெல்ல

அடங்கித்தான் போவான் பிறகு

​365)​
என்னையன்றி வேறொருவள் வந்தாலும் நீயாவாய்

எண்ணெயின்றித் துள்ளும் கடுகு

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-அறம்


(இறை)அவன் வணக்கம்:

356
அருவில் உருவாய்; கருவில் தருவாய்
மறைந்தே இருப்பான் அவன்

357
உருவில் அருவாய்; தருவில் கருவாய்
உறைந்தே இருப்பான் அவன்

358
வெளியில் வளியாய்; வழியில் ஒளியாய்
நிறைந்தே இருப்பான் அவன்

359
அறியார்க்(கு) அரியன்; அறிதற்(கு) எளியன்
அடியர்க்(கு) அடியன் அவன்

360
வினையறுக்க வேண்டும்; முடிக்கும் வரையில்
துணையிருக்க வேண்டும் அவன்
.

இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்


ஏன்..ஏன்..ஏன் ?!!!!!!!!!!!!!!!!!!!!!
351)​

கொள்ளையர் வாழ்வதும் தன்நலம் இல்லாத

கொள்கையர் வீழ்வதும் ஏன்


​352)​

வேலிக்கு அருகில் நடப்பதைக் காணாத​

போலிகளாய் மாறியதும் ஏன்


353)​

கண்முன் நிகழும் இழிச்செயலைக் கண்டிக்கும்

தன்மை அழிந்ததும் ஏன்


​354)​

உள்ளதை உள்ளபடி சொல்லிவிடும் வெள்ளையுள்ளம்

இல்லாமல் போனதும் ஏன்


​355)​

உண்மையை ஊட்டிவிட்டு நல்வழியைக் காட்டிவிடும்

தன்மையின்றிப் போனதும் ஏன்