இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
April 27, 2014
இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்
விழி,அறி...! :)
366)
விடியும் வரையில் முடங்கிக் கிடந்தால்
விரைந்து முடியும் பொழுது
367)
முடிந்த வரையில் முடக்கம் தவிர்த்தால்
விரைந்து விடியும் பொழுது
368)
தலையில் இருந்தால்தான் கூந்தல்; தரையில்
கிடந்தால் அதன்பெயர் வேறு
369)
பாதி வரையும் படித்தறியும் பாடம்தான்
மீதி வழியின் விளக்கு
370)
ஒருவிரல் முன்சுட்ட மற்றதுமேல் நோக்க
மறுமூன்றும் காட்டும்உன் நெஞ்சு
April 2, 2014
இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்
என்னவனே..மன்னவனே..!
361)
நீர்வார்க்கும் மண்ஆகும் பாத்திரமாய்; பத்திரமாய்
நீர்வாரும்; காய்ந்திருப்பேன் நான்
362)
விழிமூடும் வேளையெல்லாம் , எந்தன் வழிமூடி
முன்வந்து நிற்பான் அவன்
363)
ஒளிந்திருப்பான் எங்கோ; உணர்ந்து, மழைக்கால
மண்போல் கரையும் மனது
364)
அடக்கிவைப்பேன் எ ன்(று)எள்ளி ஆர்ப்பரிப்பான்; மெல்ல
அடங்கித்தான் போவான் பிறகு
365)
என்னையன்றி வேறொருவள் வந்தாலும் நீயாவாய்
எண்ணெயின்றித் துள்ளும் கடுகு
இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-அறம்
356
அருவில் உருவாய்; கருவில் தருவாய்
மறைந்தே இருப்பான் அவன்
357
உருவில் அருவாய்; தருவில் கருவாய்
உறைந்தே இருப்பான் அவன்
358
வெளியில் வளியாய்; வழியில் ஒளியாய்
நிறைந்தே இருப்பான் அவன்
359
அறியார்க்(கு) அரியன்; அறிதற்(கு) எளியன்
அடியர்க்(கு) அடியன் அவன்
360
வினையறுக்க வேண்டும்; முடிக்கும் வரையில்
துணையிருக்க வேண்டும் அவன்
.
இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்
351)
கொள்ளையர் வாழ்வதும் தன்நலம் இல்லாத
கொள்கையர் வீழ்வதும் ஏன்
352)
வேலிக்கு அருகில் நடப்பதைக் காணாத
போலிகளாய் மாறியதும் ஏன்
353)
கண்முன் நிகழும் இழிச்செயலைக் கண்டிக்கும்
தன்மை அழிந்ததும் ஏன்
354)
உள்ளதை உள்ளபடி சொல்லிவிடும் வெள்ளையுள்ளம்
இல்லாமல் போனதும் ஏன்
355)
உண்மையை ஊட்டிவிட்டு நல்வழியைக் காட்டிவிடும்
தன்மையின்றிப் போனதும் ஏன்
Subscribe to:
Posts (Atom)