இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 29, 2014

ஏ...இறையே


கடும் கோபத்தின் வெளிப்பாடு ...
சான்றோர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்

கோபக்குறள் / என்குற்ள் 411 - 420

ஏ...இறையே

நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றை
அள்ளித் தருகிறாய்! ஏன்?

​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி
வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ?

துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு;
மதிதெளிந்த செய்கையா கூறு

சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்
தள்ளுவதா சாதனை​?​ சொல்

மெய்தானோ! ”இல்லையென்று சொல்லவில்லை; நல்லது
தான்இருந்தால்” என்போரின் கூற்று


​ஏன் இப்படி ? ​பிடியும்...என் சாபம் படியும் :
துதிப்போரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை
என்போரைத் தூற்றும் உலகு

இறைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை
இறையல்ல என்று விடு

இரைகேட்கும் குஞ்சைஇரை ஆக்காது அதன்தாய்;
மறைஇதைச் சொல்வீர் இறைக்கு

துதிப்போரைச் சாய்க்கசதி செய்யும் இறையை
மதிப்போரும் மாய்வார் விரைந்து

​நிழல்வேண்டி நிற்பவரைத் தள்ளிவிடு வோர்க்கு
புழல்வெளியில் உண்டாம் இடம் ​​

October 20, 2014

மடக்கு

(மடக்கு = ஒரு சொல், இரு பொருள்)
//சொற்சிலம்பம் / வார்த்தை விளையாட்டு//

மடக்குக்குறள்:
(ஒரு படம் = இரு உருவம் / வாத்து, முயல் )

406)
படியும் எனநினைத்து பண்பற்றுப் பாய்ந்தால்
படியும் உனைஎதிர்க்கும் பார்

407)
கொடுக்கும் மனத்தைக் கெடுக்கவரும் தேளின்
கொடுக்கும் மடிந்து விடும்

408)
விலங்கும் சிறையும் தவற்றைச்சீர் செய்யும்;
விலங்கும் அறியும் இது

409)
விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து

410)
ஓடு தரும்தருணம் பார்த்திருப்போர் தம்மோடு
கூடிப் பயனில்லை ஓடு

October 14, 2014

ஆணவம்



401)
சித்தர் இருப்பார்தன் உள்மறைந்து; பித்தர்
பறப்பார்தன் ஆற்றல் வியந்து


402)
வீழ்ந்தழிந்த சித்தாந்தம் வாழ்வதாய் எண்ணியே
வாழ்ந்திழிந்து போவோர் உளர்


403)
பகலில் விளக்கேற்றும் பித்தரைச் சுற்றி
இரவில் இருக்கும் இருட்டு


404)
தானென்னும் எண்ணம்தம் உள்கொண்டோர்; தானே
நகர்வதாய்ச் சொல்லும் நிழல்


405)
விட்டுக் கொடுப்பதால் கெட்டுவிட மாட்டாய்;
கெடவேண்டும் என்றால் மறு

October 11, 2014

கவனித்துக் கணித்த சில....!




396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்


397)
முன்தத்திச் செல்லும் தவளையைப் பின்பற்றிப்
போகிறது கண்கொத்திப் பாம்பு


398)
மோணம் திறந்து வழிகிடைக்கும் நாள்வரையில்
மோனம்தான் பாம்பின் மொழி

(மோணம் =பாம்புப் பெட்டி, மோனம் = மெளனம்)

399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது


400)
தலையின் மலருக்கு வீழாது வண்டு;
வளைதாண்டி வாழாது நண்டு

October 8, 2014

பெண்ணே...பெண்ணே....!


391)
பால்நிலவைப் பாற்கடலில் தோய்த்(து)அவள்முன் போஎன்றேன்;
மேலும் வெளுத்த(து) அது

392)
மானவளை வென்றுவிட்ட பின்பு; துவண்டதுகண்(டு)
ஆனேன்நான் அம்புபட்ட ஒன்று

393)
மயிலும் துயிலும் ஒயிலாள்; குயிலும்
பயிலும் ஒலியாள் இவள்

394)
எனதளவில் எல்லாம் எளிதென்று இருந்தேன்
உனதழகைக் காணும் வரை

395)
உந்தன் இருவிழியில் முந்தும் சிறுதுளியும்
எந்தன் கருத்தழிக்கும் அம்பு