இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
November 12, 2013
இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / இன்பம்
அவளைப் பற்றி(ய) நான் :
346)
கண்ணில் வெடிவைத்துக் காத்திருப்பாள்; கண்ணிவெடி
தோற்றணையும் கன்னியிவள் முன்பு
347)
கதிர்அரிவாள்க் கூர்கண் அவளுக்கு; எதிர்வருவாள்
என்செய்யப் போகிறேன் நான்
348)
வாழப் பிடிக்கும் இடமெது வென்பேன்;உன்
தோள்தான(து) என்பாள் பிடித்து
349)
முப்பொழுதும் உன்நினைவே தானென்றேன்; மூச்செறிந்தாள்
எப்பொழுதும் ஏனில்லை என்று
350)
மீனானால் வீழ்ந்திருப்பேன்; மானானால் வாழ்ந்திருப்பேன்
தானாக உன்வலைக்குள் நான்
இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்
அறிவு :
341
கொடுக்கும் மனத்தை கெடுக்கும் குணத்தை
விடுக்கும் துணிவே அறிவு
342
குறையை மறைக்க முனையா(து) அளவைக்
குறைக்க முயல்வ(து) அறிவு
343
துளையைச்சீர் செய்யாது நீர்சேர்க்கப் பாயும்
நிலையைத் தவிர்த்தல் அறிவு
344
தங்கத் திடம்சேரும் செம்பு நகையாகும்;
தங்குமிடம் தேர்வ(து) அறிவு
345
முயல்பிடிக்கும் கூரை முகம்பார்த்துக் கூறும்
இயல்பை அடைதல் அறிவு
Subscribe to:
Posts (Atom)