இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 3, 2012

பொன்னியின் செல்வன் 100 : ராசராசனுக்கு என் (வெண்)பாமாலை...2



பெருமையின் பெருமை அவன் :
பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நாளில்
பெரும்திரளாய் பொங்கியமெய் கீர்த்தியை கண்ணசைவில்
கொன்றான்; ’அடியேன் சிவபாத சேகரன்’
என்றுரைத்து நின்றான் நிலைத்து (8)

சேனை புடைசூழ பொற்கவசம் பட்டுடுத்தி
யானைமேல் சுற்றுவான் சோழமன்னன் முன்பிங்கு;
வெண்ணிற ஆடையுடன் வெற்றுடம்(பு) என்றாலும்
வின்நிறைந்து நிற்கிறான் இன்று (9)

பொறுமையின் சிகரமானவன் :
அருண்மொழி வர்மனுக்(கு) ஆளும் உரிமை
இருந்தாலும் சிற்றப்பன் இச்சைக்(கு) அருமை
அரியணையை விட்டுத் துறந்த பெருமை
பொறுமைக்கு நல்லதோர் காட்டு (10)
(சிற்றப்பன் = உத்தமச் சோழன்)

கலங்காது காத்திருந்தால் காலம் கனியும்;
உலகாளும் வேளை ஒருநாள் வருமென்றும்
எண்ணிரண்(டு) ஆண்டுகள் கொக்கெனக் காத்திருந்து
திண்ணமாய் வென்றான் அரசு (11)

வேந்தென்றாலும் பாசத்தில் வீழ்ந்தவன் :
ஆதித்த சோழன் கொலைச்சதித் திட்டத்தைப்
போதித்த காந்தளூர்ச் சாலையின்மேல் போர்த்தொடுத்து
மொத்தமாய் வென்றொழித்து சுத்தமாய் நின்றழித்து
ரத்தப் பழிதீர்த்தான் வேந்து (12)

வாழ்வளித்த ஆதித்த சோழனை வஞ்சித்து
வீழ்த்திய சுற்றத்தை வேரோ(டு) அறுத்து
குலத்துடன் பேரரசைத் தாண்டித் துரத்தி
புலம்பெயரச் செய்தான்எம் வேந்து (13)
(ஆதித்த(கரிகால்)சோழன் = ராசராசனின் அண்ணன் )

வந்தியத் தேவன் அருண்மொழி வர்மனுடன்
குந்தவை வானதி பூங்குழலி மாதேவி
ஆதித்த சோழனும் நந்தினியும் உள்நுழைந்து
பாதிக்கா தாருண்டோ இங்கு (14)
(சோழன் பெருமையை தமிழகத்தின் கடைக்கோடிவரையிலும் எடுத்துச் சென்ற
ஐயா. கல்கி அவர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்)


...........2

May 2, 2012

பொன்னியின் செல்வன் 100 : ராசராசனுக்கு என் (வெண்)பாமாலை...!


அன்பு உள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள் :
ஒரு மாமன்னனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளின் தொகுப்பு இது......
குறிப்புகள் தவறாகத் தோன்றும் இடங்களில் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள் ........காத்திருக்கிறேன்

அருண்மொழி வர்மனாய்ப் பிறந்து
ராஜராஜ சோழனாய் இருந்து
சிவபாத சேகரனாய் நிறைந்து
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
கோடி இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்
எம் மன்னவனுக்கு
நூறு பாடல்கள் கொண்ட
ஒரு பாமாலை அமைக்கும் முயற்சி இது .........

சிவனுக்கும் ...அவனுக்கும் ..
சித்தம் இதுவென்றால்
இவன்மூலம்அத்தனையும் நடந்தேறிவிடும்...



பொன்னியின் செல்வனுக்கு ஒரு பாமாலை

மெய்க்கீர்த்தி :
அருள்வழியும் குந்தவையின் அன்பினை உண்டான்;
அருண்மொழி என்னும் இயற்பெயர் கொண்டான்;பல்
ஆயிரம் ஆண்டுகடந்(து) ஓங்குமவன் கீர்த்திநின்று;
பாயிரம்நான் பாடுகிறேன் இன்று (1)

’திருமகள் போல’ எனத்தொடங்கி நிற்கும்
முதலிரண்டு மெய்க்கீர்த்தி; இன்றும் முதற்போரில்
’காந்தளூர்ச் சாலைக் கலமறுத்த’ எம்குல
வேந்தனின் வீரத்தின் சான்று (2)

மதுரையை வீழ்த்தியபின் கொல்லம் அழித்து
கொடுங்கோளூர் வென்று கடல்கடந்து கால்பதித்த
மும்முடிச் சோழனின் மூன்றாம்மெய்க் கீர்த்தியது
நம்முன் உரைக்குமவன் மாண்பு (3)

கட்டடக்கலை :
கொஞ்சும் அழகினை கல்லினில் கண்டவன்;
மஞ்சினை மிஞ்சிடும் கோபுரம் கொண்டவன்;
தஞ்சையின் மூத்தவன்; பாரில் எவரையும்
விஞ்சியவன் எங்களின் வேந்து (4)

ஒருநூறோ(டு) ஐம்பதடி சேர்ந்திணைந்த கோவில்;
இருநூறில் பத்தொழித்(து) ஓங்கும் விமானமது;
ஏழ்பிறப்பும் மீள்பிறந்து கண்டு களித்திட
ஏழாண்டில் கட்டினான் வேந்து (5)

பெரும்கோவில் சிற்பியை பாராட்டிப் போற்றி
பெருந்தச்சன் என்றபெரும் பட்டம் அளித்து
தனக்கிணையாய் கல்வெட்டில் ஒன்றாய்ப் பதித்த
உனக்கிணை இல்லையாம் இங்கு (6)

கலிங்கம் நுளம்பம் தடிகைகங்கை பாடியுடன்
கொல்லமும் காந்தளூர் ஈழத்தைப் பற்றியதில்
இல்லை சிறப்பு; கருங்கல்லில் சிற்பக்
கலைவளர்த்த மாண்பே சிறப்பு (7)

(அமைப்பு : இன்னிசை)
(தொடரும்....

May 1, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


நாட்டு நடப்பு :
91)
பலவேசம் காட்டும்; பலவாசம் கூட்டும்;
இலவசம் கண்டால் பதுங்கு

92)
ஆற்றில் படகிருந்தால் போற்றித் தலைவணங்கு;
ஊற்றிலது கண்டால் ஒதுங்கு

93)
நெஞ்சில் நிலைக்கும்;கால் நீட்டும் வரையிலும்
பிஞ்சில் புகட்டும் கருத்து

94)
விலையேற்றம் பாழும் நிலத்துக்கும் உண்டு;
நிலைமாற்றம் என்ப(து) இயல்பு

95)
பழிகூறிப் பம்முதல் பண்பாமோ?; பாரில்
வழியறியாப் பாதையும் ஏது!