இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 21, 2009

திருக்குறளும் , என் குரலும் .....!

அன்பின் உள்ளங்களே .,

திருக்குறளுக்கான எளிய விளக்கமாக (அ ) ஒத்தக் கருத்துள்ள எனது முதல் குறளையும், தொடர்ந்து அதற்கான திருக்குறளையும் ‘ஆசிடை நேரிசை வெண்பா’ வாக அமைத்துள்ளேன் .

தங்களின் மேலான அறிவுரைகளால் , இலக்கின் திசையினை அறிந்தேன் . இலக்கினை நோக்கி செலுத்துங்கள் . இயன்றதைச் செய்வேன்.

நன்றி !

[ 26.7 ஆசிடை நேரிசை வெண்பா

இருகுறள்களை ஒன்று சேர்த்து, ஒரு நேரிசை வெண்பாவாக்க முயலும்போது,
முதல் குறள் 'நாள்' அல்லது 'மலர்' என்ற ஓரசைச் சீரில் முடிந்தால், அந்த ஓரசையுடன்
ஒன்றோ, இரண்டோ அசைகள் சேர்த்தால் தான், தளை தட்டாத நேரசை வெண்பா
(தனிச்சொல்லுடன்) உருவாகும். (ஏன்?) 'காசு', 'பிறப்பு' என்று
முடிந்தாலும் , பொருத்தமான எதுகையுடைய
தனிச்சொல்லைத் தேர்ந்தெடுக்க ஒன்றோ, இரண்டோ அசைகளைச் சேர்க்க நேரிடும்.
இவற்றை 'ஆசிடை நேரசை வெண்பா'க்கள் என்பர். 'ஆசு' என்பது உலோகத் துண்டுகளை
இணைப்பதற்குப் பயன்படுத்தும் பற்று.

நன்றி ; யாப்புலகம் / கவிதை இயற்றிக் கலக்கு / திரு .பசுபதி அய்யா அவர்கள் ]

அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :

எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகுக்கு என்றுமாண் டவன்தான் - உலவும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
-----------------------(1)

[முதல்குறள் ஈற்று = டவன் ; ஆசு = தான் ]


கற்றறிந்தோர்; ஆண்டவன்தாள் ஏற்காதோர்; எல்லாம்
அறிந்தும் அறியா தவராவார் - முற்றிலும்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
----------------------(2)

[முதல்குறள் ஈற்று = தவர் ; ஆசு = ஆவார் ]


அதிகாரம் 02 : வான் சிறப்பு :..

மண்ணுயிரின் வாழ்வுயர வானிலிருந்(து) காலமெல்லாம்
மண்புகும மிழ்தாம் மழையது - என்றும்போல்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
---------------(3)

[ முதல்குறள் ஈற்று = மழை; ஆசு = அது ]


அதிகாரம் 7 : மக்கட்ப் பேறு :..

கற்றோர் அவையில் மகனை முதன்மைப்
பெறவைத்தல் தந்தை பொறுப்பாகும் - பெற்றெடுத்த
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
-----------------------(4)

[முதல்குறள் ஈற்று = பொறுப்பு; ஆசு = ஆகும்]


மக்களே சொத்தாவர் ; ஆற்றும் வினைப்பயன்
பெற்றோரை வந்தடை யும்பாரீர் - நற்புகழ்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையால் வரும்
---------------------(5)

[முதல்குறள் ஈற்று = யும் ; ஆசு = பாரீர்]

அதிகாரம் 8 : அன்புடைமை :..

அணையால் கடலை மறிக்க முடியுமா ?
கண்ணீரே காட்டுமுள்ளத்(து) அன்பதை -- அன்புடையோர்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
--------------------------(6)

[ முதல்குறள் ஈற்று = அன்பு ; ஆசு = அதை]




அதிகாரம் 10 : இனியவை கூறல் : ..
இனிமேல் எதனால் கலகம்; அதனால்
இனிமையாய்ப் பேசிப் பழகுவீர் - என்றும்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று
--------------(7)

[ முதல்குறள் ஈற்று = பழகு ; ஆசு = வீர் ]

No comments: