இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 10, 2009

திருக்குறளும் , என்குரலும்...!

அதிகாரம் 2 : வான் சிறப்பு
12)
உணவாக்க உற்ற துணையாகும்; உலகுக்(கு)
உணவாய் இருக்கும் மழைஇங்கு - மண்ணிலே
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


[முதல்குறள் ஈற்று = மழை ; ஆசு = இங்கு]

13)
பருவமழை பொய்த்தால் கடும்பசியில் உய்யும்
பெரும்கடல் சூழ்இவ் உலகு - விரிநீல
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி


(முதல்குறள் ஈற்று = உலகு ; ஆசு = - ]

15)
பொய்த்துக் கெடுத்துப்பின் பெய்து கொடுக்கவும்
செய்யவல்ல(து) இங்கு மழைமட்டும் - பெய்யாக்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


[முதல்குறள் ஈற்று = மழை ; ஆசு = மட்டும் ]

16)
மழைத்துளி வீழாது போய்விடின் மண்ணிலொரு
புல்நுனியும் காண்ப(து) அரிதாகும் - விண்ணின்
விசும்பின் துளிவீழின் அல்லாமல்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது


[முதல்குறள் ஈற்று = அரிது ; ஆசு = ஆகும் ]

17)
பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்தான் - விரிந்த
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்


[முதல்குறள் ஈற்று = னால் ; ஆசு = தான் ]

No comments: