இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

March 13, 2017

இரோம் சர்மிளா ...! .. நல்லதோர் வீணை ..... !!


---பதினாறாண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் - கிடைத்ததோ தொண்ணூறு ஓட்டுகள்----

831)
போராளி என்போர் பெரும்பாலும் ஏமாளி
என்றுதான் பேர்பெறுவார் இன்று

832)
போராளி போராடித் தோற்றுவிட்டால் கோமாளி
யாகத்தான் பார்க்கும் உலகு


833)
நன்றிகெட்ட நாய்களுக்கு நம்பிக்கை ஊட்டவா
தும்பிக்கை யோடலைந்தாய் நீ

834)
ஒருவரிடம் ஏமாந்தாய் என்றால் அவரைமிக
நம்பினாய் என்றே பொருள்


835)
இருக்கும் வரைத்தள்ளி நிற்பது; இறந்தபின்
போற்றுவது தான்நம் இயல்பு

836)
வழிதெரிய வைத்தோரை நன்றி மறந்து
வழித்தெறிவோர் வீழ்ந்தாலும் நன்று


837)
ஊர்வாழ வேண்டுமென ஈரெட்டாண்டு அன்னத்தை
விட்டவளைக் கைவிட்டது ஊர்

838)
நம்நலம் காப்பதற்குத் தன்சோற்றை விட்டதற்கு
தந்தோம்நாம் தொண்ண்ண்ணூறு ஓட்டு


839)
அறியற்கு அரியது அறியானைச் சேர்ந்தால்
பெரிதாய் அடையும் இழிவு


840)
தனைநம்பி வந்தவரை வீழ்த்த நினைப்பவரின்
வாழ்வுதனை வீழ்த்தும் வினை

No comments: