இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 19, 2014

அவளதிகாரம் - இயற்கை..இயற்கையைத் தவிர வேறில்லை :


இன்பம்/ இயற்கையதிகாரம் / என்குறள் 436-440 /

இயற்கையைச் சொல்கிறேன்; நீவீர் இயன்றபொருள்
கொண்டால்நான் இல்லை பொறுப்பு
பூத்தாடும் தோட்டத்தில் காவலில்லை என்றானால்
கூத்தாடும் தேனுண்ணும் வண்டு
சட்டெனப் பற்றுமாம் வண்டுகள்; மொட்டுகள்
பட்டெனப் பூக்கும் பொழுது

கொய்யும் தொலைவிலுண்டு கொய்யாக் கனியிரண்டு;
காய்க்குமா கொய்துண்ணும் வாய்ப்பு

தாங்கும்தன் தண்டையும் தொய்திட வைத்திடும்
தூங்கும் பலாப்பல உண்டு

November 14, 2014

மகளதிகாரம்


குழந்தைகள் தின வாழ்த்துகள்

மகளதிகாரம் / /என்குறள் 426 - 435
பால் மாற்றி இதை மகனதிகாரம் எனவும் கொள்ளவும் :))
”என்ன படிக்கிறாய்” என்றேன்; ”படிநீயும்”
என்றுதந்தாள் பாதி கிழித்து
(கரு: நன்றி: Mohamed Ismail Buhari M )

கிறுக்குவாள்; ”என்னஇது” என்பேன்; ”குரங்கு”என்பாள்;
மாறும் குரங்காகக் கோடு

”ஒருஊர்ல” என்றுநான் சொன்னதையேச் சொன்னாலும்
கேட்பாள்; புதியது போன்று

’நரிபாட்டி காக்காக் கதை’யின் நெறியென்ன
என்கிறாள்; என்சொல்வேன் நான்

படித்தாள் மடித்தாள்பைக் குள்திணித்தாள்; வாய்த்தால்
கிடப்பேன்; அவள்கைமுன் தாள்

நடைபயில முந்தும் உனக்கு குடைபிடிக்க
ஏங்கும் உலவும் நிலவு

தூக்கம்:
______________
தூக்கத்தில் புன்னகைக்கக் கற்றுத் தருமவளை
ஏக்கத்தில் பார்த்திருப்பேன் நான்

மூடிக் கிடக்கும் இமையினுள் ஓடி
அலையும் விழிகள் அழகு

அலைபேசியில் (கடல்கடந்த) தந்தை:
___________________________________________
காதுக்குள் ”அப்பாவா?” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்

காதுக்குள் ”அப்பா-வா!” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்

November 10, 2014

இது அழகு


என்குறள் / பொருள் / 421 - 425

பார்வையே அழகு
_____________________


ஊனத்தை வென்றுஅதை உன்குறியீ(டு) என்றாக்கு;
கூன்தானே ஔவைக்(கு) அழகு

முத்துப்பல் காட்டிவரும் சிட்டுக்கள் கூட்டிவரும்
தெத்துப்பல் பாட்டி அழகு

நேர்த்தியாய் செய்யும் செயலுக்குள் நேரும்
தவறுக்கும் சேரும் அழகு

புதரோ பதரோ அழகருகே நின்றால்
அதற்கும் வருமாம் அழகு

இருக்கும் இடமே சிறப்பாம் ஒருவர்க்கு;
இரவே நிலவுக்(கு) அழகு

October 29, 2014

ஏ...இறையே


கடும் கோபத்தின் வெளிப்பாடு ...
சான்றோர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்

கோபக்குறள் / என்குற்ள் 411 - 420

ஏ...இறையே

நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றை
அள்ளித் தருகிறாய்! ஏன்?

​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி
வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ?

துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு;
மதிதெளிந்த செய்கையா கூறு

சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்
தள்ளுவதா சாதனை​?​ சொல்

மெய்தானோ! ”இல்லையென்று சொல்லவில்லை; நல்லது
தான்இருந்தால்” என்போரின் கூற்று


​ஏன் இப்படி ? ​பிடியும்...என் சாபம் படியும் :
துதிப்போரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை
என்போரைத் தூற்றும் உலகு

இறைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை
இறையல்ல என்று விடு

இரைகேட்கும் குஞ்சைஇரை ஆக்காது அதன்தாய்;
மறைஇதைச் சொல்வீர் இறைக்கு

துதிப்போரைச் சாய்க்கசதி செய்யும் இறையை
மதிப்போரும் மாய்வார் விரைந்து

​நிழல்வேண்டி நிற்பவரைத் தள்ளிவிடு வோர்க்கு
புழல்வெளியில் உண்டாம் இடம் ​​

October 20, 2014

மடக்கு

(மடக்கு = ஒரு சொல், இரு பொருள்)
//சொற்சிலம்பம் / வார்த்தை விளையாட்டு//

மடக்குக்குறள்:
(ஒரு படம் = இரு உருவம் / வாத்து, முயல் )

406)
படியும் எனநினைத்து பண்பற்றுப் பாய்ந்தால்
படியும் உனைஎதிர்க்கும் பார்

407)
கொடுக்கும் மனத்தைக் கெடுக்கவரும் தேளின்
கொடுக்கும் மடிந்து விடும்

408)
விலங்கும் சிறையும் தவற்றைச்சீர் செய்யும்;
விலங்கும் அறியும் இது

409)
விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து

410)
ஓடு தரும்தருணம் பார்த்திருப்போர் தம்மோடு
கூடிப் பயனில்லை ஓடு

October 14, 2014

ஆணவம்



401)
சித்தர் இருப்பார்தன் உள்மறைந்து; பித்தர்
பறப்பார்தன் ஆற்றல் வியந்து


402)
வீழ்ந்தழிந்த சித்தாந்தம் வாழ்வதாய் எண்ணியே
வாழ்ந்திழிந்து போவோர் உளர்


403)
பகலில் விளக்கேற்றும் பித்தரைச் சுற்றி
இரவில் இருக்கும் இருட்டு


404)
தானென்னும் எண்ணம்தம் உள்கொண்டோர்; தானே
நகர்வதாய்ச் சொல்லும் நிழல்


405)
விட்டுக் கொடுப்பதால் கெட்டுவிட மாட்டாய்;
கெடவேண்டும் என்றால் மறு

October 11, 2014

கவனித்துக் கணித்த சில....!




396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்


397)
முன்தத்திச் செல்லும் தவளையைப் பின்பற்றிப்
போகிறது கண்கொத்திப் பாம்பு


398)
மோணம் திறந்து வழிகிடைக்கும் நாள்வரையில்
மோனம்தான் பாம்பின் மொழி

(மோணம் =பாம்புப் பெட்டி, மோனம் = மெளனம்)

399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது


400)
தலையின் மலருக்கு வீழாது வண்டு;
வளைதாண்டி வாழாது நண்டு