இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

April 18, 2017

மரம் ... ! வரும்காலத்தின் உரம் ... !!

891)
ஆளுக்கு ஒருமரம் நட்டு;வரும் நீர்தேக்க
ஊருக்கு ஒருகுளம் வெட்டு


892)
அறம்வளர்க்க அப்புறம் பார்ப்போம்; முதலில்
மரம்வளர்க்க முன்வரப் பார்


893)
சொன்னால் குளம்வெட்ட ஆளில்லை, தன்னால்
மரம்வெட்டா நாளில்லை ஆம்


894)
மரம்வைத்தால் கேலிசெய்யும் பார்,மரம் வெட்ட
வருவோர்க்குக் கூலிதரும் பார்


895)
மதம்வளர்க்க ஏங்கும் மனிதன், மரம்வளர்க்க
வந்தால்தான் ஓங்கும் உலகு

January 20, 2017

ஏறுதழுவு ... சல்லிக்கட்டு ... ( ஜல்லிக் கட்டு) ...!




821)
வீட்டுக்குள் மெல்லவந்து சோற்றுக்குள் கால்நீட்டும்
பீட்டாவின் பொட்டியைக் கட்டு

822)
நாட்டை அபகரிக்க மாட்டைக் குறிவைத்தோர்
ஆட்டைக்கு வைப்போம்வா வேட்டு

823)
பேட்டாவைக் கூட்டினால் பீட்டாவின் பேட்டாவாய்க்
கூவிவரும் கூட்டத்தை ஓட்டு

824)
நாட்டை ஒழிக்கும் சதியின் முதல்படிதான்
மாட்டை அழிக்கும் விதி



825)
கதைமுடிக்கும் திட்டமிட்டு வந்தோர் திகைக்க
சதையாடும் என்பது உணர்த்து

826)
நம்நாட்டைக் காக்கும் முயற்சியை நம்வீட்டில்
நம்நாட்டு மாட்டில் தொடங்கு



827)
மாடென்ன செய்யுமெனக் கைவைத்து நாடொன்றாய்
ஆகவழி செய்தார்க்கு வாழ்த்து

828)
இவரெல்லாம் என்செய்வார் என்பவர் எண்ணம்
தவறென்று காட்டுவோம் வா

829)
சல்லிக்கட்டு ஏனென்று கொள்ளிவைக்க வந்தவரைச்
சல்லிசல்லி யாக்குவோம் வா



830)
வாடிவா சல்திறக்க வீடுவா சல்துறந்து
வாடிவா செல்வோம் விரைந்து