இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label மனைவி. Show all posts
Showing posts with label மனைவி. Show all posts

September 8, 2017

என்னவளே.. அடி... என்னவளே !!


இன்று ....எங்களது மணநாளில்..... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...என்னவளுக்கு சமர்ப்பணம் .... என்னாலான சின்னஞ் சிறு( நன்றிக்கடன் ) பரிசு !

1116)
உறவுபல உண்டென்ற போதிலும் என்உணர்வு,
ஒன்றுவது உன்னிடத்தில் தான்


1117)
தனக்காகக் காத்திருந்தேன், தன்னிடமே சேர்ந்தேன்,
உனக்குள் எனைக்கண்ட நான்


1118)
கடைசிவரை உன்நிழலில் நானிருக்க வேண்டுவதே
என்கடைசி ஆசையாம் ஆம்


1119)
மூளையெல்லாம் உன்நினைவுள் மூழ்கிவிட, கண்காணும்
மூலையெல்லாம் உந்தன் முகம்


1120)
தேனுள் அடையைப்போல், மீனுள் கடலைப்போல்,
என்னுள் விடையாய் அவள்

September 9, 2015

இதுவும் நன்றிக்கடனே !


இன்று .... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...ஆம் நான் மீண்டு(ம்) பிறந்த மணநாளில் ..என்னவளுக்கு .... என்னாலான சின்னஞ் சிறுபரிசு !
591)
ஆண்டவன்முன் ஓம்சொன்னால்; ஆள்பவள்முன் ஆம்சொன்னால்
தானாகத் தேனாகும் வாழ்வு

592)
வேறாகி நிற்பேன்; நிலையகற்றிக் காலின்கீழ்
வேராகிக் காப்பாள் இவள்

593)
தடுமாறும் என்னை தரைமோதும் முன்பு
கரைசேர்க்க வந்தாள் இவள்

594)
வந்தாரைப் போஎன்றோர் சொல்சொல்லாள்; மந்தாரைப்
பூச்சொல்லால் செய்வாள் சிறப்பு

595)
உலர்ந்த உணவை மலர்ந்த முகத்தால்
விருந்தாக மாற்றிவிடு வாள்

August 6, 2015

என்னவளே.....அடி என்னவளே .!!


566)
உன்னில்தான் என்னைநான் கண்டுகொண்டேன்; இன்றுவரை
தன்னைத்தான் கண்டதில்லை கண்

567)
விடையில்லை என்றால் விதியில்லை; நீயில்லை
என்றால் இனியில்லை வாழ்வு

568)
விழலெனக்கு நீரிறைக்க வந்தவளின் பாத
நிழலுக்கு நானே நிழல்

569)
விதையின்றி வேரில்லை உந்தன் நினைவன்றி
வேறில்லை என்னுலகில் பார்

570)
நாணவில்லை சொல்வதற்கு; வாய்ப்புவந்தால் வானவில்லைப்
போல்வளைவேன் நானவளின் முன்பு