இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 11, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


என்னவளே...எல்லாமும் ஆனவளே:


131)
கட்டுவாள்; பின்பதறித் தன்கையால் பொத்துவாள்;
குத்திவெளி வந்திருக்கும் என்று

132)
கொடுத்திணைத்தாள் வந்து; பிடித்தணைத்தாள் தந்து;
கொடுத்ததைக் கேட்பாளோ பின்பு

133)
தன்னைக் கொடுத்தவுடன் என்னை எடுத்துவிட்டாள்;
உண்மையில் யாருக்(கு) இழப்பு

134)
சந்தேகம் ஏதுமில்லை; உன்தேகம் மட்டும்தான்
என்தாகம் தீர்க்கும் விருந்து

135)

சேர்வோம் எனும்உன்ஓர் சொல்தானே என்மனச்
சோர்வை அகற்றும் மருந்து

( நன்றி : கரு : எம் முன்னோர் :)

July 8, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!




கண்ணென்ன கண் :


126)
நாணுமவள் கண்பார்க்க நானும்தான் காத்திருப்பேன்;
நாளும் நிகழும் இது

127)
மரம்கொத்தும் கூர்அலகும் மண்டியிட்டுத் தோற்கும்
மனம்குத்தும் உன்ஓர்கண் முன்பு

128)
மைபூசும் உன்கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்
பொய்பேசும் உன்உள் மனது

129)
கண்டவுடன் பற்றிவிடும் கற்பூரத் துண்டு
கலந்த கலவையவள் கண்

130)
சீர்கெடுக்கும் மையிட்டக் கண்ஒன்று; சீர்கொடுத்தென்
சீக்கெடுக்கும் மற்றது வந்து

July 3, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


முதுமை அழகு :

121)
கணக்கில்லை என்னவர் காட்டும் இடக்கு;
கனக்கவில்லை இன்றும் எனக்கு

122)
இறுக்கம் நிறைந்த(து) இளமை! இருக்கட்டும்!
இந்தச் சுருக்குக்கே(து) ஈடு

123)
முகவரி இல்லாது முன்புண்டு; இன்றுன்
முகவரிக்குள் வாழ்கிறேன் நன்று

124)
எனக்கென வீழும் முதல்மழையும் நீ!எனக்குள்
வாழும் முதல்துளியும் நீ

125)
அன்று பதுமையாய் நீஅழகு: இன்றுன்
முதுமை அழகோ அழகு

June 30, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


உழவும் , உலகும் :

116)
சாகும் படித்தூண்டும்; நீரின்றிக் காய்ந்திருக்கும்
சாகுபடி இல்லா நிலம்

117)
விருந்து சிறக்கும்; விதைப்பை சிறுக்கும்,
விதைப்பை நிறுத்தும் அளவு

118)
"கதுரடிச்ச காடெல்லாம் வீடாச்சு; போகும்
சதுரடிக்கு நல்ல விலை"

119)
விதையுண்டு நீருண்டு; நல்விலை இன்றேல்
புதையுண்டு போகும் உழவு

120)
முன்னோரும் மூவேந்தும் போற்றிவைத்த மண்மரபைக்
காக்கும் முறையை அறி


....தொடர்வேன் ... ;>)

June 25, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அவல்..அவள். .அவல்:)

106)
நினைவிலவள் வந்தவுடன் பெய்து நனைக்கிறதென்
தோட்டத்தை மட்டும் மழை

107)
விழியென்னும் வேலெய்து வீழ்த்தினாள்; வீழ்ந்தும்
வலியில் உணர்ந்தேன் இதம்

108)
வருவாய் வடிவெனக் காத்திருந்தேன்; வந்த
விடிவோ வருவாய் இழப்பு

109)
கொல்லையில் பூத்திருக்கும் முல்லைக்கும் உண்டு;உள்ளம்
கொள்ளை அடிக்கும் திறம்

110)
மங்கைக்கென் மீதேதோ கோபம்: நிகழ்வெண்ணி
மங்கத் தொடங்கியதென் கண்


..விடாது வருவேன்..:)

June 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


தமிழ் வாழ்த்து :
101)
புகழ்வோர்க்கும் நின்றே இகழ்வோர்க்கும் நன்றே
நிகழ்த்திடுவாள் என்தமிழ்த் தாய்

102)
கொன்றாலும் மென்றுநீ தின்றாலும் நின்று
நிலைத்திடுவாள் என்தமிழ்த் தாய்

103)
கழுத்துக்கும் கொண்ட எழுத்துக்கும் ஆயுதம்
கண்ட(து) எமது தமிழ்


குறள் வாழ்த்து :
104)
திருமால் திருவடிக்கும் அய்யன் இருஅடிக்கும்
மிஞ்சிய(து) ஏதுமுண்டோ இங்கு

105)
சித்தரும் ஈசனும் நேசனும் புத்தரோ(டு)’
அல்லாவும் ஏற்பார் குறள்

June 16, 2012

இருவரியில் சொல்வேன்...குறள் போல சில.....!



நம்பிக்கை :

96)
எதுவும் நிலையில்லை என்ப(து) உணர்ந்தார்க்(கு)
எதுவும் மலையில்லை இங்கு


97)
முயலா முயலுக்கு முன்செல்லும் ஆமை;
இயலும் வரையில் முயல்


98)
முயல்பவரின் முன்நிற்கும் வெற்றி; தயங்குபவர்
பின்சென்(று) ஒளியும் அது


99)

தேவையெல்லாம் தத்தளிப்போர்க்(கு) ஓர்துடுப்பு; தேவையில்லை
அங்குகுளிர் காயும் அடுப்பு


100)
எளிதன்(று) எனமலைத்(து) ஏங்குகிறேன்; எல்லாம்
எளிதென்று சொல்வீரா வாழ்த்து


(# சதமடிதிருக்கிறேன் ...எத்தனை கணக்கில் வருமோ தெரியவில்லை :))